எளிய மக்களின் உரிமைக்காக ஒலிக்கும் ஒரு வன்முறைக்குரல் கேப்டன் மில்லர்
சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதை. தனுஷ் சமாஸ்தானங்களின் ராஜாக்கள் செய்யும் அடக்குமுறைகள், வெள்ளைக்காரர்கள் செய்யும் அடிமைத்தனத்தை விட கொடுமையானது என நினைக்கிறார். அந்த நினைப்பின் அழுத்தம் காரணமாக வெள்ளைக்காரர்களின் ராணுவத்தில் சேர்கிறார். அங்கிருந்து அவருக்கு ஒரு திருப்பமும், ஒரு விருப்பமில்லா செயலும் நடந்து விட தனுஷ் வேறோர் முடிவை எடுக்கிறார். அந்த முடிவு என்ன? அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் என்னென்ன என்பதாக படத்தின் திரைக்கதை விரிகிறது
நடிப்பு அசுரன் தனுஷ் இப்படத்திலும் அபாரப்பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். க்ளோசப் காட்சிகள், வயலன்ஸ் காட்சிகள் என எந்தக் காட்சி வந்தாலும் அங்கு தனுஷின் ஆட்சிதான். பிரியங்கா மோகன் இப்படத்தில் வேறோர் பரிணாமம் பூசியுள்ளார். அறிமுக நடிகை சுவாதி கிருஷ்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வெள்ளைக்கார வில்லன்கள், உள்ளூர் வில்லன்கள் என டஜன் கணக்கான வில்லன்கள் படத்தில். அனைவரின் காஸ்டிங்கும் பெர்பெக்ட். சிறிது நேரம் என்றாலும் மனதில் பதிகிறார் சந்தீப் கிஷன். சிவராஜ்குமார் வரும் இடங்களில் அனல் பறக்கிறது. மற்ற நட்சத்திரங்களும் நடிப்பில் ஜொலிக்கிறார்கள்
ஜிவி பிரகாஷின் இசை தான் படத்தின் ஆதார ஜீவன். 1940 கால கட்டத்திற்கு அவரது இசையும் நம்மை அழைத்துச் செல்கிறது. ஒளிப்பதிவாளரின் வேலை படத்திற்குள் பெரும் அதிசயத்தை நடத்தியுள்ளது. எவெரி ப்ரேமிங் வேறலெவல் தரம். நல்ல மீட்டரில் சிங் ஆகி வேலை செய்துள்ளார் ஒளிப்பதிவாளர்
படத்தில் ஹீரோயிசத்திற்காக சில விசயங்கள் சேர்க்கப்பட்டாலும் அவை சரியாக கதையோடு கோர்க்கப்பட்டுள்ளது நல்ல அம்சம். மிக முக்கியமாக அற்புதமான ஒரு அரசியலை படத்தின் ஆரம்பத்தில் பேசுயுள்ளார்கள். பெரியார் வைக்கம் போராட்டத்தின் மூலமாக எளிய மக்களை ஆலயத்திற்குள் செல்ல வைத்தார். இது நிஜ வரலாறு. இந்த வரலாற்றின் அடிநாதத்தை படம் ஆரம்பத்தில் தொட்டது க்ளாசிக் ரகம். ஹீரோயிசமும் குறையாமல் படத்தின் என்கேஜிங்கும் குறையாமல் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். காட்சியமைப்பில் இந்தப்படக்குழு எடுத்துள்ள சிரத்தைக்காகவே கேப்டன் மில்லருக்கு சல்யூட் அடிக்கலாம்
3.25/5
-மு.ஜெகன் கவிராஜ்