ஓஷோவின் மாஸ்டர் பீஸ் இந்த நூல்🔥🔥 தலைப்பு மட்டுமல்ல..ஒவ்வொரு பக்கமும் அதியற்புதம்💯
நினவாகா என்ற பெளத்த கவிஞருக்கும் இக்குயு எனும் ஞானிக்குமான உரையாடலும், அந்த உரையாடலை வைத்து ஓஷோ எடுக்கும் தத்துவப்பாடமும் நூலின் இறுதிப்பக்கங்களில் வருகிறது. மிகச்சிறந்த வாழ்க்கைத் தரிசனம் அந்த எபிசோட்..
“உலகத்தில் நீ எப்போது போட்டிபோட விரும்புகிறாயோ அப்போதே நீ தோற்றுவிடுகிறாய். போட்டியைத் தவிர்த்தலே வெற்றி” எனும் ஓஷோவின் கூற்றில் ஒரு மணிநேரம் தலைவைத்துப் படுத்திருந்தேன். காரணம் சிறிது இருந்தாலும் நாம் போடும் சண்டைகளால் அடையக்கூடிய பயன் பெரும்பாலும் வலியாகத் தான் இருக்கிறது. வலி வரும் பாதையை உருவாக்குவதற்காக நாம் செலவிடும் நேரத்தை அந்தப் பாதையை தவிர்க்க பயன்படுத்தலாம்.

ஒரு பார்வையற்றவரிடம் வெளிச்சம் பற்றி உணர்த்த முயல்கின்றனர். அவர் வெளிச்சம் பற்றிக் கூறப்படும் எவற்றையும் நம்பவேயில்லை. உணர்த்த முற்படும் அறிவாளிகளுக்கு பெருங்கோபம். அந்த வழியாக வரும் புத்தரிடம், “இவருக்கு வெளிச்சம் பற்றிய புரிதலையும் அறிவுரையையும் கொடுங்கள்” என்கிறார்கள். புத்தர் அவர்களைப் பார்த்துச் சொல்கிறார், “இவருக்குத் தேவை அறிவுரை பதவுரை அல்ல.. மருத்துவம். இவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்கிறார். அந்தப் பார்வைத்திறன் சவால் கொண்டவர் சிகிச்சைப் பெற்று ஒளியோடு வருகிறார். அவர் வெளிச்சம் பற்றி உணர்கிறார். இது எவ்வளவு பெரிய திறப்பு!
தனக்குத் தெரிந்தவற்றை தெரியாத நபர்களிடம் சென்று கேட்டு வாதாடுவதும் போராடுவதும் வாழ்வை வீணடிக்கும் செயல் அல்லவா! ஓஷோ அதை அழகாக உடைக்கிறார். எல்லாம் தெரிந்த நிலைக்கும் எதுவுமே தெரியாது என்று சொல்லும் நிலைக்கும் செல்வதற்கான ஊன்றுகோலை கைகளில் பரிசளிக்கிறார் ஓஷோ..
“நீ என்னனி மல்லுக்கு நின்னாலும், மூச்சடங்கி மூனுமணி நேரம் தாண்டிட்டுன்னா , சீக்கிரம் பாடிய எடுக்கணும்பா” னு தான் சொல்லப்போறான்வ. இதுக்கு ஏம்டே சும்மா கிடந்து அனத்துத?” என்ற எங்கள் ஊர் பெரியவர் சொல்லி கேட்டதுண்டு
இந்த வாழ்வில் நாம் எதையும் ஜெயிக்க முடியாது. இதை முழுமையாக உணர்ந்து கொண்டால் எதிலும் தோல்வி இருக்காது.
சுற்றிலும் அகங்காரம், எப்போது சிக்குவான் என்ற வன்மம், இப்படி இருந்தால் தான் மதிக்கப்படுவாய் என்ற மதிப்பீடு, ஆகிய சமூக அழுத்தங்களைத் தாண்டி ஓஷோவை கடைப்பிடிப்பது சாத்தியமா எனத்தெரியாது..
ஆனால் எதிர்பார்ப்புகளை குறைத்தால் அதன்மூலம் ஆற்றல் அதிகமாகும். ஆற்றலே மாற்றத்தின் முதல்படி என்பதை உணர்த்துகிறது ஓஷோயிசம். உழைத்தால் உயரலாம். அந்த உழைப்பின் வீரியம் 100% வெளிப்பட வேண்டுமானால் உழைக்கும் போது உழைப்பின் பலன் பற்றிய கற்பனை குறையவேண்டும்..
Finally..
பரியேறி போகும் வாழ்க்கை வேகத்தில் சற்று நேரமேனும் ஓஷோவிடம் பசியாறிச் செல்வது ஆனந்தம் அளிக்கும். அவர் பரிமாறுவது ஆழம் வரை ருசிக்கும்🙏🙏🙏