Tamil Movie Ads News and Videos Portal

அரபு இலக்கியம்-ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

பெரும் சிரத்தை நிறைந்த மொழிநடை.. அரபு இலக்கிய ஆளுமைகளை அறிமுகப்படுத்துவதோடு அவர்களின் கதைகள், கவிதைகள், கட்டுரைகளை இன்னும் விரித்துச் சொல்லியிருக்கலாம்.

அரபு இலக்கியத்தோடு பெரும் பரிச்சயம் உள்ளவர்களுக்கே இந்த நூல் புலப்படும் என்பது சோகம். வாசகனுக்கு துளியும் பரிச்சயமில்லாத படைப்பு அவன் கைகளுக்குச் செல்லும் போது அதைப்பற்றி அவன் தெரிந்துகொள்ள ஆசைப்படும் அளவில் அந்த படைப்பு இருக்க வேண்டும். நான் மிகவும் சிரத்தை எடுத்துப் படித்தும் மண்டையில் பெரிதாக பதிவாகவில்லை. இருப்பினும் இயற்கை நமக்கு கனெக்ட் ஆகாத ஒரு விசயத்தைத் தராது என்ற நம்பிக்கை இருந்தது. அந்த அடிப்படையில் அரபு இலக்கிய ஆளுகைகளின் சில பேட்டிகளும், சில வித்தியாசமான சொற்களும் நூலில் காணக்கிடைத்தன. மொரோக்கோ இலக்கியம் பற்றிய பகுதியில், “ஓரினச்சேர்க்கை என் அம்மாவுக்கு விளக்கப்பட்டது” என்ற கட்டுரை சிறப்பாக இருந்தது. ஓரினச்சேர்க்கை சம்பந்தமான பதிவை பொதுவெளியில் மறைமுகமாக எழுத வைத்ததிற்காக என் நண்பன் ஒருவனுக்கு மரண அடி கிடைத்தது. அப்படியான சூழல் வாய்த்த நமக்கு இப்படியான கட்டுரைகள் சில மென் உணர்வுகளை புரிய வைக்கிறது என்பது ஆறுதல். சில ஓரினச்சேர்க்கை ஜீவன்கள் சொல்லும் கதைகளும், சம்பவங்களும் நமக்கு பெரும் ஆச்சர்யமூட்டுவை. ஆனந்த விகடனில் வெளியாகும், “அன்பிற்கும் உண்டு அடைக்குந்தாழ்” என்ற தொடரில் கடைசி வியாழன் அன்று ஒரு ஓரினச்சேர்க்கை இளைஞனின் வாழ்வு எழுதப்பட்டிருந்தது. டாக்டர் சிவபாலன் இளங்கோவன் எழுதிவரும் இத்தொடரில் குறிப்பாக சென்றவார அத்தியாயம் அருமையாக இருந்தது. அந்த அத்தியாயம் வாசிக்கும் போது இந்த நூலில் இடம்பெற்றுள்ள மேற்சொன்ன கட்டுரை நினைவில் நீந்திப் போனது.
மேலும் இந்த நூலில் ஒருசில கவிதை வரிகள் ரசனையாக இருந்தன.