Tamil Movie Ads News and Videos Portal

தத்தகாரம்-ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

“பாடல் எழுதுவதற்காக இசை அமைப்பாளர்கள் தரும் மெட்டை ” தத்தகாரம்” என்பார்கள்.

“தன்னா தன்ன தன்னனா” என்ற தத்தகாரம் தான் “எங்கே அந்த வெண்ணிலா” இதில் கே,லா இரண்டும் நெடில். ங்,ண் இரண்டும் ஒற்றெழுத்து, ஏனையவை எல்லாம் குறில். சும்மா ஒரு அறிமுகத்திற்குத் தான் இது. ஒரு பாடலின் வரிகளை குறில் நெடில் மற்றும் அசைப்பிரித்து ரசிப்பதென்பது எத்தகைய பேரின்பம் என்பதை யுகபாரதி அண்ணன் மிகச்சிறப்பாக இந்நூலில் அள்ளித் தந்துள்ளார்.

இசை இல்லாமல் மொழி சிகரம் ஏற முடியாதென்றால் மொழி இல்லாமல் இசை உயரம் தொடவே முடியாது என்பதை ஒரு பாடலாசியர் என்ற கர்வம் குறைத்து நிறுவுகிறார் அண்ணன். உண்மை தானே!

இசையைப் பற்றி எழுதும் போது இளையராஜா இல்லாமல் போகுமா? அதுதான் எழுத்து ஆகுமா? இளையராஜாவின் மொழியாளுமை குறித்து யுகபாரதி அண்ணன் கொடுக்கும் தகவல் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்( இக்கட்டுரை ஏற்கெனவே தடம் இதழில் வந்திருந்தது)

இந்த நூலில் தன் பாண்டித்துவத்தை காட்டும் பாதை இருந்தும் அந்தப்பயணத்தை தவிர்த்திருக்கிறார் அண்ணன். மேலும் இந்நூல் மூலமாக நிறைய சுவாரஸ்யமான தகவல்களையும் சில அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களையும் அறிய முடிந்தது.

“கருப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு” என்ற வார்த்தையே தேவாவே எழுதிவிட, வைரமுத்து அதை மறுக்க, சேரன் அந்த வார்த்தைக்காக மன்றாட, இறுதியாக அந்தப்பாடலை பா.விஜய் எழுதினார். இது ஒரு தகவல் என்றால்,

மற்றொரு பாடகர் பாடிய பாடலை யேசுதாஸ் பாடியதாக வரலாறு தகவல் சொல்ல. அதற்கான விருதையும் யேசுதாஸ் வாங்கிக் கொண்டார் என்பது பகீர் தகவல்! (மேன் மக்களுக்குமா இப்பிடி? ம்க்கும்)

இளையாராஜாவும் ரகுமானும் புதிய பாடலாசிரியர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பதை குற்றச்சாட்டாக இல்லாமல் ஒரு தகவலாக தருகிறார். ஏனோ லைட்டா சுடுகிறது. கொடுத்திருக்கணும் இல்லியா?

பெரும் ஆச்சர்யம் வித்யாசேகரின் தமிழ் ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட போது தான். அவரைப்பற்றிய கட்டுரை மிகவும் ஆர்வத்தை தந்தது. அதேபோல் பெரும் ஆதங்கத்தை தந்த கட்டுரை தேவா பற்றியது. எத்தனையோ தரமான பாடல்களை தந்தும் அவர் ஏன் தரம் தாழ்ந்த விமர்சனங்களால் தாக்கப்பட்டார் என்பதற்கான கேள்விக்கு இன்று வரையிலும் பதில் இல்லை. யாரையும் பழித்தும் வலிக்கும் படியும் பேசத்தெரியாத பண்பு தேவாவிற்கு உண்டு. கூடவே தன்னைத் தாழ்த்திச் சொல்லும் பெரும் பணிவும் அவரிடம் உண்டு. அதுவே அவரின் திறமைக்கான மரியாதையை கொடுக்கவில்லையோ என்னவோ? அதை அண்ணனின் பேனா சரியாகச் சொல்லியுள்ளது.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பாடலாசிரியர் பூவைச் செங்குட்டுவனின் முருக வரிகளில் கண்ணதாசன் மயங்கிய கதை நிச்சயமாக மயங்க வைக்கும். பூவைச் செங்குட்டுவனுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வேலையை வாலியும் மாயவநாதனும் செய்திருப்பதை கேட்குங்கால் மனம் மகிழ்ந்தது. அதற்கான காரணம் மாயவநாதன் என் உறவுவழித் தாத்தா. இன்னும் அவரைப்பற்றி இரண்டொரு வார்த்தை எழுதி இருக்கலாம். ஏன் என்றால் மிகக்குறைந்த பாடல்களே எழுதினாலும் காத்திரமான வரிகளை எழுதியவர் மாயவநாதன் தாத்தா! திரைத்துறையில் யாரும் அவரைப்பற்றி பெரிதாக பதிவு செய்யவில்லை. வைரமுத்து தன்னுடைய மெளத்தின் சப்தங்கள் நூலில் சிறிதாக குறிப்பிட்டிருக்கிறார்.

சக பாடலாசிரியர்களின் வரிகளை சிலாகித்து யுகபாரதி எழுதியிருப்பது நிஜமாகவே ஆகச்சிறப்பு. வாலி வார்த்தைகளுகாக செய்யும் சமரசம் முதல் நிறைய பாடல்களில் விரவியுள்ள நிறை குறைகளையும் நிறையவே அலசி இருக்கிறார்.

ஒரேயொரு குறை. தமிழ்த்திரையுலகில் 20 வருடங்களாக பெண் பாடலாசிரியராக அசத்தி வரும் தாமரை அக்காவைப் பற்றி ஒரு பெரும் பதிவை எழுதி இருக்கலாம். அதை ஏன் தவற விட்டார். .அல்லது தவிர்த்து விட்டார் என்று தெரியவில்லை.

மத்தபடி என் மனதுக்கு மிகவும் நெருக்கமான புத்தக வரிசையில் தத்தகாரமும் இடம் பெற்று விட்டது