Tamil Movie Ads News and Videos Portal

அரண்மனை 4- விமர்சனம்

கோடைகாலத்தில் ஒரு கொண்டாட்ட சினிமா

சுந்தர் சியின் அரண்மனையில் இருந்து மற்றொரு பேய்படம். இந்த முறை சுந்தர் சி தெய்வத்தின் துணையோடு அடக்கியிருப்பது அசாம் பேயை. சில குறிப்பிட்ட அடையாளம் உள்ள பெண்களை கொலை செய்து தீயசக்திகளை தன்னகத்தே கொள்ள வேண்டும் என்பது ஒரு மந்திரவாதியின் திட்டம். அப்படியான குறிப்பிட்ட அடையாளத்தோடு இருக்கிறார் சுந்தர் சி தங்கையான தமன்னா. அவரை தீயசக்தி போட்டுத்தள்ளுகிறது. அப்படியே தமன்னாவின் மகளையும் காவு வாங்க தீயசக்தி முயற்சிக்க, தமன்னா பேயாகவும், சுந்தர் சி ஆண் தாயாகவும் அந்தக் குழந்தையை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை

படத்தின் கடைசி பாடலில் தமன்னா காட்டியுள்ள தாராளம், படத்தின் முந்தைய காட்சிகளை எல்லாம் ஓரம் கட்டுகிறது. வெயில் காலம் என்பதால் ஏகத்திற்கும் ஆடை குறைப்பு செய்துள்ளார் கிரேட். நடிப்பில் குறை வைக்காத தமன்னாவைப் போலவே ராஷி கண்ணாவும் குறை வைக்கவில்லை. போனால் போகட்டும் என நடித்துவிடாமல் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் சுந்தர் சி. யோகிபாபு, கோவைசரளா, விடிவி கணேஷ், மறைந்த நடிகர் ஷேசு ஆகியோர் காமெடியில் கதகளி ஆடியுள்ளனர். “நாம பேயை அடக்கிருவோம்னு அவன் நம்பினது கூட தப்புல்ல..ஆனா அதை நாம நம்புனோம் பாரு” என்று க்ளைமாக்ஸ் ஏரியாவில் யோகிபாபு பேசும் வசனத்திற்கு தியேட்டர் முழுதும் சிரிப்பலை

ஹிப் ஹாப் ஆதி இசையால் பேயடி அடித்துள்ளார். இருக்கங்குடி மாரியம்மா இடி முழுங்க வாடியம்மா என்ற பாட்டில் பக்திமோட்-க்கு அழைத்துச் செல்கிறார். ஒளிப்பதிவாளர் நல்ல விஷுவலை கொடுத்துள்ளார். கொட்டிக் கொடுத்த பணத்திற்கு இன்னும் கெட்டிக்காரத் தனமாக சிஜி டீம் வேலை செய்திருக்கலாம்

வழக்கமான பேய் படங்களுக்கே உண்டான திரைக்கதை என்றாலும் படம் எங்குமே தேங்கவில்லை. குறிப்பாக கடைசி அரைமணி நேரம் படம் மின்னலாகப் பாய்கிறது. இந்தக் கோடை விடுமுறையை குடும்பத்தோடு கொண்டாட ஏற்றபடமாக இருக்கிறது இந்த அரண்மனை 4
3.25/5
-மு.ஜெகன் கவிராஜ்