ZEE5 நிறுவனம் அதன் அடுத்த ஒரிஜினல் சீரிஸான, ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது. ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில் தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ளனர்.
இந்த அதிரடி திரில்லர் சீரிஸில் சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த முன் திரையிடல் நிகழ்வில் சீரிஸை பார்த்து ரசித்த பத்திரிக்கை விமர்சகர்கள், படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் மொத்த படக்குழுவினரும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சீரிஸ் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறுகையில்…,
இந்த சீரிஸில் நடித்தது பெரிய மகிழ்ச்சி. இந்த சீரிஸிற்காக நிறைய புதிய இடங்கள், நம்ப முடியாத இடங்களுக்கெல்லாம் பயணித்திருக்கிறேன், பல ஊர்களுக்குப் பயணித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அறிமுக நடிகர்கள் முதல் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் வரை நிறையப் பேர் இதில் நடித்துள்ளார்கள், எல்லோரிடமும் நல்ல நட்பு உள்ளது. எல்லோருமே மிகச் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே மிகக் கடுமையாக உழைத்துள்ளார்கள் வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து போது, அனைவருக்கும் காய்ச்சல், ஆனால் யாருமே ஓய்வெடுக்காமல் உழைத்தார்கள். நாகா சாரின் தீவிர ரசிகன், மிகப் பொறுமையாக அனைவரையும் கையாள்வார். அவரது பொறுமை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடன் நடித்த சிறு பையனுக்குக் காட்சியை அவ்வளவு விளக்கமாகச் சொல்லி, நடிப்பை வாங்குவார். அவரை பார்க்க ஆசையாக இருக்கும். அவருக்காகத் தான் இந்த சீரிஸ் நடித்தேன், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன், அவருடைய படைப்பில் இன்னும் நிறைய நடிக்க ஆசை. என்னுடன் நடித்த தன்ஷிகா மிகச் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். அவருக்கு இது முக்கியமான திருப்புமுனையாக இருக்கும். ZEE5 மற்றும் அபிராமி மீடியா ஒர்க்ஸ் இருவருக்கும் நன்றி, மிகச் சிறப்பாக பார்த்துக் கொண்டார்கள். இந்த சீரிஸ் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை தன்ஷிகா கூறுகையில்…
உங்களோடு இணைந்து இந்த சீரிஸ் பார்த்தது, மிக மிகத் திருப்தியாக இருந்தது. தாய் மொழியில் மீண்டும் ஒரு படைப்பு, மிகத் திருப்தியாக இருக்கிறது. ஐந்தாம் வேதம் மூலம் மிகச்சிறந்த குழுவுடன் இணைந்து பயணித்து மகிழ்ச்சி. என் சின்ன வயதில் மர்ம தேசம் மிகப்பெரிய பயத்தைத் தந்த சீரிஸ், எனக்கு மிகப்பிடித்த சீரிஸ், நாகா சார் கூப்பிடுகிறார் என்றவுடன் உடனே அவர் ஆபீஸ் போய்விட்டேன், ஐந்தாம் வேதம் பற்றிச் சொன்னார், அனு கதாப்பாத்திரம் பற்றிச் சொன்னார். அவர் ஐடியாவே பிரமிப்பாக இருந்தது, அவரிடம் பேசினாலே பிரமிப்பாக இருக்கும். இந்த சீரிஸில் எங்கள் படக்குழு கடுமையான உழைப்பைத் தந்துள்ளார்கள். பல தடைகள் இருந்தது, ஆனால் அபிராமி ராமநாதன் சார் அனைத்தையும் மிக எளிதாகக் கையாண்டார், அவருக்கு நன்றி. ஒய் ஜி மகேந்திரன் சார் உடன் நடித்தது மிக ஜாலியான அனுபவமாக இருந்தது. ZEE5 மூலம் இந்த சீரிஸ் உங்கள் எல்லோரையும் சென்று சேரவுள்ளது, இந்த சீரிஸை, எங்களை நம்பியதற்கு ZEE5 க்கு நன்றி. என்னை நம்பி இந்த பாத்திரம் தந்த நாகா சாருக்கு நன்றி. இந்த சீரிஸிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் நாகா கூறுகையில்
ஐந்தாம் வேதம் கதையைக் கடந்து 10 வருடமாகச் சிறிது சிறிதாக எழுதி வந்தேன், முழுமையாக முடிந்த பிறகு கௌஷிக்கிடம் தந்தேன், சிஜுவுக்கும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே ஆரம்பிக்கலாம் என்றார். 7 மாதம் திரைக்கதை வேலை மட்டும் பார்த்தோம். பின்னர் தான் அபிராமி வந்தார்கள், எல்லாம் இனிமையாக நடந்தது. என்னோடு இந்த திரைக்கதையை மணிகண்டன் இணைந்து எழுதினார் அவருக்கு என் நன்றி. ஏஐ பற்றிய பயத்தை, நான் இந்த சீரிஸில் கொஞ்சம் பேசியிருக்கிறேன், இன்னும் 2 சீசன் இருக்கிறது, அதில் மனிதர்கள் வெற்றி பெறுகிறார்களா என்பது கதையாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடித்திருக்குமென நம்புகிறேன் உங்கள் ஆதரவைத்தாருங்கள் அனைவருக்கும் நன்றி.
ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ தமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது !