திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சி. வி. குமார் மற்றும் எஸ் .தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சண்முகா ஃபிலிம்ஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார்.
இம்மாதம் பதிமூன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ஆர். ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன், ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை, இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத், படத்தொகுப்பாளர் இக்னேஷியஸ், கலை இயக்குநர் சுரேந்தர், நடிகர்கள் வாகை சந்திரசேகர், மிர்ச்சி சிவா, அருள்தாஸ், ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் தொடக்கமாக ‘சூது கவ்வும் 2 ‘ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மேடை ஏறி இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் இயக்குநர் எஸ் ஜே அர்ஜுன் பேசுகையில்,
”தயாரிப்பாளர் சி வி குமார் நிறைய விஷயங்களை மனதிற்குள் வைத்திருப்பார். அது நடைபெறும் போது தான், சாத்தியமாகும் போது தான், அவர் என்ன நினைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிகழ்வு திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்டின் ரீ யூனியன் நிகழ்வாக இருக்கிறது.
நான் முண்டாசுப்பட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பா ரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரை பார்க்கும்போது எனக்குள் பயம் இருக்கும். அந்த பயம் தற்போது எனக்கு மீண்டும் வந்து விட்டது இவர்கள் அனைவரையும் ஒன்றாக இங்கு பார்க்கிறேன்.
சூது கவ்வும் 2 படத்தினை இயக்குவதற்காக எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. படத்தை ஓரளவு சிறப்பாகவே செய்து இருக்கிறோம். இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி பார்த்துவிட்டு திட்டாமல் இருந்தாலே வெற்றி பெற்றதாகவே நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்த கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தனர். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அனைவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சி வி குமாருக்கும் நன்றி. தயாரிப்பாளர் தங்கராஜை அவருடைய உணவகத்தில் சந்தித்து முதலில் பீட்சா 4 படத்தின் கதையை விவரித்தேன். அதன் பிறகு சூது கவ்வும் 2 படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அதை கேட்டுவிட்டு அவர் இந்த படத்தை தயாரிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார் இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் மிர்ச்சி சிவா பேசுகையில்,
”தயாரிப்பாளர் சி வி குமாரும், இயக்குநர் அர்ஜுனும் என்னை சந்தித்தனர். சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றனர். இந்தப் படத்திற்கு நலன் குமாரசாமி ஒரு அவுட்லைனை சொல்லி இருக்கிறார், அதனை நாங்கள் விரிவுபடுத்தி இருக்கிறோம் என இயக்குநர் அர்ஜுன் முழு கதையையும் சொன்னார், நன்றாக இருந்தது.
தயாரிப்பாளர் சி வி குமார் தமிழ் சினிமாவின் சொத்து. அவர் ஒரு பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக்கழகத்தில் வசதி இல்லை என்றாலும் திறமையான மாணவர்களை உருவாக்கியிருக்கிறார். சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர். இன்னும் நிறைய புதுமுக திறமைசாலிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து அவர் படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
தயாரிப்பாளர் தங்கராஜ் தங்கமான மனிதர். படப்பிடிப்பு முழுவதும் சுவையான உணவை வழங்கினார். இந்தப் படத்திற்கான சம்பளம் காசோலையாக எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவை விற்பனையான பிறகு சம்பளம் கிடைக்கும் என சொல்லி இருக்கிறார்கள். அதனை நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்த படத்தில் வாகை சந்திரசேகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது மறக்க முடியாத அனுபவம்.
இந்த படத்தின் இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் அற்புதமான திறமைசாலி. அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துகள்,” என்றார்.