இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார்.
முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான “ஒரு கிடாயின் கருணை மனு” மற்றும் “சத்திய சோதனை” படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
RB Talkies சார்பில் S.R. ரமேஷ் பாபு மற்றும் Box office studios சார்பில் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தில் நடிகர்கள் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
படம் குறித்து நடிகர் யோகி பாபு கூறுகையில்..,
“சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள் . அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பாகும். மேலும் வரும் காலங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் பல தரமான கதையம்சமுள்ள படைப்புகளில் நான் தொடர்ந்து நடிப்பேன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்” என்றார்.