மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் ‘அடியே’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.
‘திட்டம் இரண்டு’ எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். மல்டிவெர்ஸ் என்ற எண்ணத்தை மையப்படுத்தி ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார்.
ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை பிவிஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் வசந்த பாலன், வெங்கட் பிரபு, மிஷ்கின், சிம்பு தேவன், ஏ. எல். விஜய், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாயகன் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,”
அடியே மிகவும் வித்தியாசமான படம். வழக்கமான படம் கிடையாது. ஃப்யூச்சர்ஸ்டிக் சயின்ஸ் ஃபிக்சன் லவ் ஸ்டோரி. இதுவே மிகப்பெரிய சவாலாக இருந்தது. சென்னையில் பனிமழை பொழியும் என்பார். ஆனால் அதனை படக்குழு திரையில் நேர்த்தியாக செய்து காட்டியது.படப்பிடிப்பு தளத்தில் வெங்கட் பிரபுவுடன் இசை தொடர்பாக விவாதிப்போம்.
நான் அண்மைக்காலமாக பணியாற்றியதில் சிறந்த பட தயாரிப்பு நிறுவனம் இதுதான் என்று உறுதியாக சொல்வேன். இந்த நாளில் இந்த தளத்தில் படப்பிடிப்பு நடக்கும் என்றால் அது உறுதியாக நடக்கும். அவர்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். நம் நேரத்தையும் வீணடிக்க மாட்டார்கள். நேரத்திற்கு மதிப்பளிப்பவர்கள். இதனால் இந்த நிறுவனத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதியாக நம்புகிறேன்.நடிப்பை பொறுத்தவரை கௌரி கிஷன், மதும்கேஷ் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் குறித்து இயக்குநருக்கு ஒரு கற்பனையான காட்சி அமைப்பு இருந்தது. ஃபியூச்சரஸ்டிக்.. மல்டிவெர்ஸ்.. இதையெல்லாம் எழுதுவதற்கு எளிதாக இருக்கும். எப்படி காட்சிப்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டேன். ஆனால் அதை எல்லாம் அவர்கள் நேர்த்தியாக காட்சிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் அருமையான இசை ஆல்பத்தை வழங்கி இருக்கிறார். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்றார்.