21 நாட்கள் ஊரடங்கினால் வேலை இன்றி தவிக்கும் சினிமாவைச் சேர்ந்த அன்றாட தொழிலாளர்களுக்கு உதவ நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நிதி அளிக்க வேண்டும் என்று பெப்சி அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது. அந்த வேண்டுகோளை ஏற்று உடனே சிவக்குமாரின் குடும்பம் சார்பாக 10 இலட்சம், சிவகார்த்திகேயன் 10 இலட்சம், விஜய் சேதுபதி 10 இலட்சம், ரஜினிகாந்த் 50 இலட்சம், பிரகாஷ்ராஜ் 150 அரிசி மூட்டைகள், தயாரிப்பாளர் தாணு 250 அரிசி மூட்டைகள் வழங்கினார்கள். இவர்கள் தவிர்த்து முன்னணி நடிகர் நடிகைகள் எவரும் எந்தவித உதவியும் அளிக்காமல் இருந்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக நடிகர் நடிகைகளில் சிவகார்த்திகேயன் தவிர்த்து யாருமே மத்திய மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கும் பணம் அளிக்கவில்லை. இந்நிலையில் பெப்சி அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “மொத்தம் உள்ள 25000 தொழிலாளர்களில் 18000 தொழிலாளர்கள் அன்றாடக் கூலிகள் தான். அவர்கள் வேலையும் வருமானமும் இன்றி தவிக்கின்றனர். தற்போது கிடைத்த நிதி 1.60 கோடியும், 25 கிலோ எடை கொண்ட 1983 அரிசி மூட்டைகளும் கொண்டு ஒருவருக்கு 500 ரூபாயும் 25 கிலோ அரிசி மூட்டையும் தருவது என்பது இயலாத காரியம். ஆதலால் இன்னும் உதவித் தொகை வழங்காத நடிகர் நடிகைகள் நிதி வழங்க முன்வர வேண்டும் என்று மீண்டுமொரு முறை பெப்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.