Tamil Movie Ads News and Videos Portal

’அஸ்திரம்’ படம் எனக்கு கிடைத்த பிரம்மாஸ்திரமா ?” -நடிகர் ஷாம்!

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக  நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

வரும் மார்ச்-7ஆம் தேதி இந்தப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது. இதையடுத்து ‘அஸ்திரம்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

நாயகன் ஷாம் பேசும்போது,

“பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமான அரவிந்த் ராஜகோபால் நான் படம் இயக்கப் போகிறேன் அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என என்னை தொடர்பு கொண்டார். அதன் பின் அரவிந்த், கதாசிரியர் ஜெகன் இருவரும் என்னை நேரில் சந்தித்தனர். அவர்கள் சொன்ன கதை ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. இதுவரை பல த்ரில்லர் படங்களை ரசித்து பார்த்து உள்ளோம். இந்தப் படத்தில் ஒரு தனித்துவமான கிரைம் இன்வெஸ்டிகேஷன் கதையை திரில்லர் வடிவத்தில் கொடுத்தது மற்ற படங்களில் இருந்து இதை வித்தியாசப்படுத்துகிறது. இதன் திரைக்கதையும் சுவாரசியமாக இருந்தது. 

இயக்குநர் அரவிந்த் டைரக்சனுக்கு புதியவர் என்றாலும் சினிமாவில் பல வருடங்களாக பணியாற்றிய அனுபவம், சில படங்களில் நடித்த அனுபவம் எல்லாமே அவரிடம் இருந்தது. அவரது பேச்சிலும் தன்னம்பிக்கை தெரிந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஈரோட்டை சேர்ந்தவர். கடுமையாக உழைத்து முன்னேறியவர். இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டவர், இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் ஒரே கட்டமாக ஆக 30 நாட்கள் நடைபெற இருப்பதால் மொத்தமாக தேதிகளை வழங்கினால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டார். 

புது இயக்குநர் என்பதால் 15 நாட்களாக பிரித்து படப்பிடிப்பை நடத்தலாமே  என்று கூட நான் சொன்னேன். ஆனால் இயக்குநர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அது மட்டுமல்ல எந்த வித பிரச்சனைகளாலும் படம் நின்று விடக்கூடாது என்பதற்காகத்தான் என் சொந்த பணத்தை மட்டுமே வைத்து படம் எடுக்கிறேன் என நம்பிக்கையுடன் கூறினார். அவர் கூறியது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. சொந்தப் பணம் போட்டு படம் எடுப்பவர்கள் சினிமாவில் ரொம்பவே குறைவானவர்கள் தான். அதனால் தான் இந்த படம் திட்டமிட்டபடி எந்த தடங்கலும் இன்றி அழகாக நிறைவு பெற்று இப்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இயக்குநர் அரவிந்த் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தன்னுடைய வேலையை விட்டுவிட்டு சினிமா மீது இருந்த ஆர்வத்தால் இந்த படத்தை பண்ணுகிறார் என்பதை உணர்ந்து கொண்டு அவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய அவருடைய நண்பர்கள் அனைவரும் அவருக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அப்படி ஒரு பிரண்ட்ஷிப்பை இப்போதுதான் நான் சந்திக்கிறேன். அரவிந்த் அந்த வகையில் ரொம்பவே லக்கி என்று சொல்லலாம். அதேபோல படப்பிடிப்பின் முதல் நாளில் இருந்து ஒரு அனுபவமிக்க இயக்குநர் போலவே எல்லாவற்றையும் அழகாக கையாண்டார் அரவிந்த்.

வாரிசு திரைப்படம் எனக்கு ஒரு கம் பேக் படமாக அமைந்தது. அதற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இந்த ‘அஸ்திரம்’ படம் எனக்கு மிக முக்கியமான படம். இந்த படத்தின் கதையை எழுதியுள்ள ஜெகன் பார்ப்பதற்கு சிறியவராக தோன்றினாலும் சினிமா பற்றிய அறிவு மிகுதியாக உள்ளவர். படம் என்ன கேட்கிறதோ அதை மட்டுமே, அழகாக திரைக்கதையாக எழுதியுள்ளார். ஒரு அற்புதமான மெசேஜும் இந்த படத்தில் இருக்கிறது. படம் பார்க்கும் அனைவருமே அதை மனதார ஒப்புக் கொள்வார்கள். இந்த படத்தில் நடித்துள்ள ரஞ்சித் இதில் அறிமுகமாகி இருக்கிறார். கிட்டத்தட்ட 20 நாட்கள் ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பில் எந்தவித தயக்கமும் குழப்பமும் இன்றி அழகாக நடித்துள்ளார். நடிகர் ஜீவா ரவியும் இந்த படத்தில் தான் நடித்துள்ள ஜேம்ஸ் கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகி நிரா மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். ‘நீ போதும்’ என்கிற ஒரு மியூசிக் ஆல்பத்தில் அவரை பார்த்தபோது இவர் நமது படத்திற்கு சரியாக இருப்பார் என அரவிந்திடம் கூறினேன். அதற்கேற்ற மாதிரி படத்திலும் நிரா சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவர் ஒரு பிசியான ஹீரோயினாக மாறுவார். படத்தில் பணியாற்றிய அனைவரிடமும் பாசிட்டிவான எண்ணங்களே அதிகம் இருந்தன. அதை படத்தில் நடித்த ஒவ்வொரு கணமும் உணர முடிந்தது.  
ஒளிப்பதிவாளர் கல்யாண் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்” என்று கூறினார்

நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து நடிகர் ஷாம் பேசும்போது,

“அஸ்திரம் திரைப்படம் உங்கள் திரைப்பயணத்தில் பிரம்மாஸ்திரமாக அமையுமா ?” என்ற கேள்விக்கு 
“இந்த படம் எனக்கு பிரம்மாஸ்திரமாக அமையுமா என்று தெரியாது. ஒரு நல்ல இயக்குனரிடம் நல்ல கதையில் நடித்துள்ளேன் என்கிற நம்பிக்கை மட்டும் இருக்கிறது. வாரிசு படத்துக்கு பிறகு நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என இருக்கிறேன். தற்போது துரை செந்தில்குமார், விஜய் ஆதிராஜ் ஆகியோரின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவங்களின் மத்தியிலும் இப்படி ஒரு புது இயக்குநரை மீண்டும் தேர்ந்தெடுக்கிறேன் என்றால் இயக்குநர் அரவிந்த் மீதும் கதை மீதும் இருந்த நம்பிக்கை என்னை கைவிடாது” என்று கூறினார்.

“அஸ்திரம் திரைப்படத்தின் அனுபவம் மற்றும் திரைப்பயணத்தின் வெற்றி வாய்ப்புகள்” குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,
“இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்றதால் வேறு எந்த படங்களுக்கும் சென்று வராமல் இதில் மட்டுமே கவனம் செலுத்தி நடிக்க முடிந்தது. மற்றவர்கள் சொல்வது போல இந்த படத்தை என் தோள் மீது ஏற்றி கொண்டு செல்லும் பொறுப்பு இருந்ததை என்னால் உணர முடிந்தது. சினிமாவில் எனக்கு 12-பியின் மூலமாக நல்ல அறிமுகம் கிடைத்தது. கடுமையான போராட்டம் எல்லாம் நான் படவில்லை. அதே சமயம் சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைவதற்கு மிகப்பெரிய அளவில் போராடி சின்னத்திரையில் பங்கு பெற்று அதன் பிறகு சினிமாவுக்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது இந்த இடத்தை பிடித்திருக்கிறார். எல்லோருக்கும் கால நேரம் என்று ஒன்று இருக்கிறது.

சிவகார்த்திகேயன் பங்கு பெற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் ஜட்ஜாக இருந்தேன். அப்போதே சிவகார்த்திகேயனிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன்.. உனக்குள் நல்ல திறமை இருக்கிறது.. நல்ல வாய்ப்பு கிடைத்தால் நீ பெரிய இடத்திற்கு செல்வாய்.. என் வீட்டில் மட்டுமல்ல.. மற்ற பல வீடுகளில் உள்ள குழந்தைகளை கவரும் திறமை உன்னிடம் இருக்கிறது என்று கூறி இருக்கிறேன். இன்று அவருடைய இந்த உயரம், வெற்றி மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் நான் அதை அப்போதே jnயூகித்த ஒன்றுதான். சிவகார்த்திகேயன் இப்போது பார்த்தாலும் கூட அன்றைக்கு நீங்கள் சொன்னீர்களே சார் என சொல்லுவார்..” என்று கூறினார்.

ஐரா, எட்டு தோட்டாக்கள், பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் வெளியாக உள்ள ரேஞ்சர், ஜாக்சன் துரை 2 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களில் துணை படத்தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார். கலை வடிவமைப்பை ராஜவேல் கவனிக்க, சண்டை பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார்.