ஊருக்கு ஆகாத ஹீரோ ஊர்த்தலைவனாக மாறும் ஆதிகாலத்து கதை
ஹீரோ விமல் சூரியோடு இணைந்து ஊரில் சேட்டையும் அரட்டையுமாக திரிகிறார். ஊரில் விமலின் அல்லுசில்லுகளைப் பார்த்து, ஊரே கூடி அவரை மலேசியாவிற்கு அனுப்பி வைக்கிறது. சில வருடங்களில் மலேசியாவிலிருந்து ரிட்டர்ன் ஆகிறார் விமல். அவரை ஊரே வரவேற்கிறது. காரணம் அவருக்குப் பத்துகோடி மலேசிய லாட்டரி அடித்ததாக மலேசியா நண்பர் ஊருக்குப் பொய்யான தகவலைச் சொல்லிவிடுகிறார். இதனால் தான் ஊர் விமலைக் கொண்டாடுறது. விசயம் தெரிந்தால் ஊரார் நம்மை டின் கட்டிவிடுவார்கள் என அறியும் விமல், ஊரின் தலைவராகி ஊருக்கு நல்லதுச் செய்கிறார். முடிவில் சுபம்/ ரசிகன் வதம்
ஹீரோ விமல் இளமையாக இருந்த காலத்தில் எடுத்தபடம் என்பதால் அதீத அழகோடு இருக்கிறார். அவருக்கு சிரீயஸாக நடிக்க வேண்டிய தேவை மிகவும் குறைவாக உள்ள படம் இது. நாயகிகள் ஓகே ரகம். சூரி மட்டும் ஆங்காங்கே நம்மை ஆறுதல் படுத்துகிறார்
இசை ஜான் பீட்டர். பாடல்களில் சரியான மீட்டரை கையாண்டுள்ளார். ஒளிப்பதிவாளர் படத்தை ஓரளவு தேற்றியுள்ளார்
படம் முடியும் தருவாயில் தான் படத்தின் கதையை ஆரம்பிக்கிறார் இயக்குநர் நந்து. அதுவரைக்கும் வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே படம் நகர்கிறது. படத்திலுள்ள அனைத்துக் கேரக்டர்களும் பேசித்தள்ளுகிறார்கள். வசனங்கள் மூலம் மட்டும் சிரிக்க வைக்க முடியாது. நல்ல வசனங்களுக்கான தருணத்தையும் திரைக்கதையில் வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் படவா நம்மைப் படுத்திவிட்டது
2.25/5
-வெண்பா தமிழ்