Tamil Movie Ads News and Videos Portal

டப்பிங்கை தொடங்கியுள்ள‘பிளாக்மெயில்’படக்குழு !

நடிகர் அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ போன்ற த்ரில்லர் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மாறன். இப்போது, ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இன்று ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார்.

இயக்குநர் மு. மாறன் கூறும்போது, ​​“திட்டமிட்டபடி படம் சரியான வேகத்தில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. நடிகர், இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் பிஸியாக இருந்தாலும் இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். அவர் தனது டப்பிங் தொடங்கி இருக்கிறார். விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும்” என்றார்.

எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம்- டிராமா கதைதான் ‘பிளாக்மெயில்’. இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைக்கிறார் மற்றும் சான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். சமீபத்தில் வெளியான ‘பிளாக்’ படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த கோகுல் பெனாய் படத்தின் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார்.