மொத்த வாழ்வையும் ஒத்த வார்த்தைக்குள் அடக்குபவர் ஓஷோ. வாழ்வு தான் கடவுள் என்கிறார். “உன் இன்ப வாழ்வை தடுக்கும் அரண்களாக மதம் இருந்தால் அந்த மதத்திற்கு மனிதத்தன்மை இல்லை” என்பது ஓஷோ கூற்று
காமத்தைத் துறக்கச் சொல்கிறது மதம். காமத்தை துறக்க முடியாது. அதில் நுழைந்து பின் அதைக் கடக்க முயற்சிக்கலாம் என்கிறார் ஓஷோ
காமம் பற்றிய ஓஷோவின் பார்வையும், காமம் குறித்து புராணங்களும், புத்தர், ஏசு போன்ற மகான்களும் சொல்லியிக்கும் அம்சங்களும் நேர் எதிர் தன்மையுடையவை.
காமத்தை ஒரு குற்றவுணர்வோடு அணுகும் மனநிலை மாறவேண்டும். காமம் உந்தும் மனதிற்கும், இன்ப நீர் முந்தும் நிலைக்கும் காரணி மனதில் படிந்துள்ள பழைய கருத்துக்கள் தான் என்பதை உளவியல் வழிநின்று ஓஷோ விளக்கும் போது ஏற்றுக்கொள்ளவே தோன்றுகிறது. பாலுறவு என்பது படைப்புத் தொழில். படைப்பவனை இறைவன் என்கிறோம். இறைவனுக்கு ஒப்பான நிகழ்வு பாலுறவு. அதைப் பெருங்குற்றத்தோடு அணுகவேண்டாம் என ஓஷோ கூற, “பொருந்தா காமத்தை ஓஷோ ஆதரிக்கிறாரோ என்று தோன்றாமலில்லை. ஒருவேளை அனைத்தையும் உடைத்தும், உரத்தும் அவர் பேசியிருப்பதால் தான் அவர் sex சாமியார் என்று அடையாளப்படுத்த பட்டிருப்பாரோ?!!
எப்படியாயினும் காமம் குறித்த, உடலுறவு குறித்த ஒரு சிறந்த தெளிவைத் தருகிறது நூல். நிச்சயமாக இதில் சொல்லப்பட்டுள்ளவை சுடும். சேம்டைம் பல விசயங்கள் மனதைத் தொடும்.
அன்பு எதிர்பார்ப்பில்லாதது. அகந்தை எதிர்பார்ப்பு கொண்டது என்பதை விளக்கும் ஒரு கதையுள்ளது நூலில். மனிதனுக்கும் மரத்திற்குமான கதை அது
தன்னையே சுற்றி வந்த சிறுவன் இளைஞன் ஆன பின் வருவதில்லையே என்று கவலை கொள்கிறது மரம். நான் பணத்தைத் தேடி அலைகிறேன். பணமின்றி உலகில் பெரிது எது? என்கிறான் அந்த இளைஞன். மரம் தன் கனிகளைப் பறித்துக் கொள் என்கிறது. பறித்துப் பணம் சேர்க்கிறான். பின் கிளைகளைக் கேட்கிறான் கொடுக்கிறது மரம். ஒரு கட்டத்தில் மரம் மொட்டையாகிறது. அவனுக்கும் வயதாகிறது. மரம் இப்போதும் அவன் மீது அன்போடே இருக்கிறது. இறுதியில் பெரு மரமாக இருந்து, வெறும் தூராக நிற்கிறது அம்மரம். அந்த மனிதன் ஒரு ஆசைப்படுகிறான். மரமெனும் தூர் மறுக்கவில்லை. உடனே அது அறுக்கப்படுகிறது. முழுதும் அறுக்கப்பட்ட மரத்திற்கு துளியும் அன்பு குறையவே இல்லை. மொத்தத்தையும் பெற்ற மனிதனுக்கு அன்பு துளிர்க்கவே இல்லை.
அன்பு செய்வதற்கு காரணங்கள் இருக்கக் கூடாது எனும் கருத்து நடைமுறைக்கு ஒத்திசையாது. எனினும் பொங்கும் அன்பை பலன் எதிர்பாராமல் பரவி விட்டால் ஆன்மிகம் சற்று நெருங்கி வர வாய்ப்புண்டு.
இயல்போடு இணைந்து போக
எதிர்வருவதை ஏற்றுக்கொள்!
கிடைப்பதெல்லாம் சிறப்பாய் மாற எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்..
உடல் வேட்கையில் விடுபட
காமத்தைக் கொண்டாடு
இனி உன் காலம் பிள்ளாய் எழுந்து விளையாடு
-மு.ஜெகன் கவிராஜ்