‘அவ்வளவு எளிதில் ஆண்களுக்கு உங்கள் வாழ்வில் இடம் கொடுத்து விடாதீர்கள்” என ஒரு இடத்தில் எழுதியுள்ளார் முருகன் மந்திரம் சார். ஆண்கள் மனதும் பெண்கள் உலகமும் நேரெதிர் கொண்டது. அதை ஆணாக இருப்பதால் உள்வாங்கி எழுதியிருப்பதாகவே உணர முடிந்தது. மேலும் அவ்வரிகளுக்குள் ஒரு சகோதரனின் எச்சரிக்கையும் தகப்பனின் பாதுகாப்பு உணர்வும் வெளிப்பட்டது. எழுத்தாளரின் நல்லன்பிற்கான சாட்சி அவ்வரிகள். ரைட்! பெண்களுக்காக பரிந்துகொண்டு சும்மா வியாக்கியானம் செய்யாமல் எதார்த்தம் பேசிய அந்தக் கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது
/அந்தக் காலத்துல ஊர்ல இருக்க மாடசாமி சித்தப்பா கொலதெய்வம் இசக்கியம்மய போட்டோ எடுக்க விடமாட்டேங்காரு. முருகன் மந்திரம் சாருக்கு வெளிநாட்ல இருந்து பிரண்டு வாங்கித் தந்த கேமராவுக்குள்ள கொலசாமி இசக்கிய கொண்டாந்துரணும்னு கொள்ளேத்த ஆச.. ஆனா மாடசாமி சின்னய்யா ஒரே வாக்குல அது தெய்வகுத்தம் ஆய்ரும்டேன்றாரு. தெய்வத்துக்கும் அடங்காத காலம் ஓடுது. அறிவியல் மாறுது. அதே மாடசாமி சின்னய்யா, முருகன் மந்திரம் சார்ட..இசக்கியம்ம கோவில் கொடைக்கி எடுத்த வீடியோ போட்டோவாப் பூராம் வாட்சப்புல அனுப்பச் சொல்தாரு/ புத்தகத்தின் தலைப்பாய் அமைந்துள்ள இந்தக் கட்டுரை மிகவும் அர்த்தம் வாய்ந்தது. உலகில் நடைமுறைக்கு ஒவ்வாத நம்பிக்கைகளை காலமும் அறிவியலும் அடித்து விரட்டும் என்பதே உண்மை.
மேலும் நூலெங்கும் மறுபடி மறுபடி அடித்துச் சொல்லப்படுவது கடவுள் மறுப்பு தான். ஒரே அடியாக கடவுள் இல்லை என்பதை அறிவியலின் துணை நின்றும், அறிவின் துணை கொண்டு நிறுவிக்கொண்டே இருக்கிறார் முருகன் மந்திரம் சார். நானோ பரம ஆன்மிகவாதி. ஆனாலும் சிலபல சமாச்சாரங்களை மெளனமாக கடந்து போக வைக்கிறது அவரது கருத்துக்கள்.
‘எதையும் இல்லை என்பதற்கு அறிவு தேவையில்லை. இருக்கு என்பதற்குத் தான் அறிவு தேவை’ என்பார் கண்ணதாசன். இதை அவர் கடும் கோபத்தில் சொல்லியிருக்கலாம். இருக்கு& இல்லை என்ற இரண்டு வாதங்களுக்கும் அடிப்படை பெரும் தேடலும் உணர்தலும் என்பது அடியேன் தெளிவு. மேலும் ஒரு தனி மனிதனின் கடவுள் நம்பிக்கை சமூகத்தை சிதைக்காமல் வளர்ப்பதாகவும் அவனுக்கு ஆத்ம திருப்தியை தருவதாகவும் இருந்தால் அதிலென்ன தவறு? என்ற இனம் என் மனம்
இந்நூலில் உள்ள அறிவியல் அறவியல் சமாச்சாரங்கள் எல்லாமே அட்டகாசமாக அமைந்துள்ளது. வழக்கம் போல எழுத்து நடையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார் முருகன் மந்திரம் சார்.
சாமி நம்பாதேன்னு சொல்லல..சாமியே இல்லன்னு சொல்லிருக்கார்.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது, எதையும் ஏற்கும் ஒருவனுக்கும் எல்லாவற்றையும் எதிர்க்கும் ஒருவருக்குமான வாசிப்பு சார்ந்த உரையாடல் போலவே இருந்தது. . But நல்ல வாசிப்பனுபவம்