I
வடசென்னையை கதைக்களமாக கொண்டு நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அதில் சிறு வித்தியாசத்தை காட்ட முயற்சி செய்துள்ளது பரோல் படம்
ஜானகி சுரேஷுக்கு லிங்கா ஆர்.எஸ் கார்த்திக் என இரு மகன்கள். மூத்த மகன் லிங்கா மீதுதான் தன் தாய் அதிக பாசத்தையும் அக்கறையும் காட்டுவதாக இளைய மகன் ஆர்.எஸ் கார்த்திக் நினைக்கிறார். அந்த நினைப்பின் விளைவுகளும், அதற்குப் பின்னால் இருக்கும் பல அதிரடி திருப்பங்களும் தான் இப்படத்தின் கதை
படத்தில் ஆர்.எஸ் கார்த்திக், லிங்கா இருவருமே தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார்கள். அண்ணன் தம்பி என்ற விசயத்தில் இருவரும் தனித்தனியாக முறுக்கி நின்றாலும் அம்மா என்ற உணர்வில் ஒன்றாக உடையும் போது இருவருமே நடிகர்களாக தங்களை நச் என அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அம்மாவாக நடித்துள்ள ஜானகி சுரேஷ் முத்திரை. வில்லன் டீம் உள்பட இருநாயகிகளுக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பொறுப்பை உணர்ந்து அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். வக்கீலாக வரும் வினோதினி பட்டையக் கிளப்பியுள்ளார்
ராஜ்குமார் அமலின் பின்னணி இசை படத்தின் கதையை தாண்டி ஒலிக்காமல் காட்சிகளுக்கேற்ப ஒலிப்பது நிறைவாக இருக்கிறது. மகேஷ் திருநாவுக்கரசின் கேமரா சென்னையின் இயல்பை அதன் இயல்பு கெடாமல் பார்த்துக்கொள்கிறது. சபாஷ்! ஒரு விறுவிறுப்பான படத்திற்கான மூட்-ஐ தன் எடிட்டிங் மூலம் கிரியேட் செய்துள்ளார் எடிட்டர் முனிஷ்
படத்தின் டைட்டிலுக்கு 100% நியாயம் செய்வது போல அமைந்துள்ளது படத்தின் நகர்வுகள். ஒரு பரோலுக்குள் பின்னால் இருக்கும் கதைகளும் வலிகளும், முக்கியமாக அரசியலும் தமிழ்நாட்டில் ஏராளம். அதை வைத்துப் பின்னப்பட்ட கதை என்பதால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நகர்கிறது திரைக்கதை
படத்தின் மெயின் கேரக்டர்களான லிங்கா, ஆர்.எஸ் கார்த்திக் இருவருமே பின்பாதியில் தான் நேர்கோட்டில் பயணிக்கிறார்கள். அதனால் முன்பாதியில் மெயின் கேரக்டர்களோடு நாம் ட்ராவல் செய்யமுடியவில்லை. இந்த இடங்களில் இயக்குநர் துவாரக் ராஜா இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அம்மாவின் மரணமும், அவரின் சடலமும் இரு சகோதரர்களுக்குள் பிணைப்பையும் வாழ்வையும் அருள்கிறது என்ற பக்கா எமோஷ்னல் ஏரியாவை இன்னும் வலுப்படுத்தியிருந்தால் இந்தப்படத்தின் தாக்கத்தில் இருந்து நமக்கு ஈசியாக பரோல் கிடைத்திருக்காது. ஆனாலும் தரமான முயற்சி என்ற அடிப்படையில் பரோலுக்கு நாம் செல்லலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்