ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீத்து தாமோதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சஃபையர் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.
இம்மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் பேரரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில்,
” இயக்குநர் சினு படப்பிடிப்பு தளத்தில் மிக வேகமாக பணியாற்றினர். ‘பேட்ட ராப்’- 90களில் இந்தியா முழுவதும் ஒலித்த பாடல். பேட்ட ராப் ஒரு வெற்றிகரமான வார்த்தை. முப்பது ஆண்டு கழித்து அந்த வார்த்தையை தலைப்பாக கொண்டு ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
பிரபுதேவா முப்பது ஆண்டுகளாக கதாநாயகனாகவே தொடர்ந்து நடித்து வருகிறார் என்றால்.. அது மிகப்பெரிய விசயம். அவருடைய நடனத்தின்போது ரசிகர்கள் அவருக்கு எலும்பு இருக்கிறதா? இல்லையா? என பேசிக்கொள்வார்கள். இப்போது வரை எலும்பு வளரவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. அவரிடம் ஏற்பட்டிருக்கும் ஒரே ஒரு மாற்றம்.. அவருடைய தாடியில் நரை தென்படுகிறது. ஆனாலும் அவர் ஆற்றலுடன் நடித்தும் வருகிறார். நடனமாடியும் வருகிறார்.
பிரபுதேவாவின் அறிமுகம் எளிதாக இருந்தாலும்.. அவருடைய இன்றைய முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் கடின உழைப்பும், திறமையும், தொழில் மீதான பக்தியும் தான் காரணம்.
அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட ராப் எனும் திரைப்படத்தில் அவருடைய ஆற்றலும், திறமையும் நிறைந்திருக்கும். அதனால் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெறும்.
தற்போது வெளியாகும் திரைப்படங்களில் நிறைய வன்முறை காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. ஆனால் இது போன்ற படங்களில் இருந்து ‘பேட்ட ராப்’ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். கலகலப்பான காமெடி …அதிரடி சண்டை காட்சி… இனிமையான பாடல்கள்.. என எனது அற்புதமான கமர்சியல் கலவையுடன் தயாராகி இருக்கிறது. பிரபுதேவா மாஸ்டருக்கு ஏற்ற வகையில் கதையும் இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் தயாரிப்பாளர் தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். ” என்றார்.
நடிகர் பிரபுதேவா பேசுகையில்,
” இந்த படத்தில் பணியாற்றும் போது படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு தளம்.. என அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது. படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகவும் இருந்தது. ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, பக்ஸ், வையாபுரி, ஜே பி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதும் சந்தோஷமாக இருந்தது.
இமான் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார். ஆனால் எனக்கு அவர் ஒரு ஜென்டில்மேன் ஆகத்தான் பார்க்கிறேன். அவருடைய பெருந்தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்போதும் பாசிட்டிவ்வானவர். இந்தப் படத்திற்கும் அவர் நல்ல பாடல்களையும், இசையும் வழங்கி இருக்கிறார்.
நான் பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தவன். அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்குள் பயம். இதனால் பாடலாசிரியர்களை கண்டால் எனக்குள் ஒரு பிரமிப்பு இருக்கும். இருந்தாலும் பாடலாசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி, பாடல்களில் ஏதாவது திருத்தம் மேற்கொள்வதுண்டு. அவை அனைத்தும் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் தான் அவர்களும் அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு திருத்தி தருவார்கள். நான் எப்போதும் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன்.
பாலிவுட் நடிகர் சல்மான்கான் ‘சிவகாசி’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களை பார்த்துவிட்டு அதனை இயக்கிய இயக்குநர் பேரரசுவை பற்றி என்னிடம் பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார். அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாமா..? என என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால் ‘பேட்ட ராப் ‘ படத்திற்கு வாழ்த்த வருகை தந்த இயக்குநர் பேரரசுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக நேர்த்தியாகவும் , திறமையாகவும் திட்டமிடுகிறார். பயங்கர புத்திசாலி. அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தால் உச்சம் தொடுவார்.
இந்தப் படத்தில் இயக்குநரும், கதாசிரியர் தினிலும் இணைந்து உருவாக்கிய திரைக்கதை எனக்கு பிடித்திருந்தது. நான் லீனியர் பாணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களை நிச்சயம் கவரும்.
தயாரிப்பாளரும், இயக்குநரும் மிகச் சிறந்த நண்பர்கள். அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றவும், பயணிக்கவும் விரும்புகிறேன்.
நடிகை வேதிகா கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருவார். திறமையான நடிகை. இல்லையென்றால் இயக்குநர் பாலா படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்குமா..! அவருடைய கடும் உழைப்பை இந்தப் படத்தில் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சன்னி லியோன் நடிகை என்பது கடந்து அனைவரையும் நேசிப்பவர். மதிப்பவர். அவர் தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.
செப்டம்பர் 27ஆம் தேதியன்று ‘பேட்ட ராப்’ வெளியாகிறது. இதற்காக முதலில் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இந்த வார்த்தையை எழுதியவர் அவர்தான். அதனுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்த ஏ ஆர் ரஹ்மானுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.