அதி தீவிர வாசகர்களுக்கு சிறுகதைகள் சிறு வேட்டை. நமக்கு சிறுகதைகளே பெரு வேட்டையாய் மாறிவிடுவதுண்டு. சுஜாதா, ஜெ.மோ, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, எஸ்.ரா என நல்ல சிறுகதைகளுக்கு சொந்தக்காரர்கள் நிறைய உண்டு. அதில் எழுத்தாளர் திரு மாலனும் உண்டு. இதிலுள்ள சில கதைகள், ஆனந்தவிகடன், அந்திமழை போன்ற பிரபல இதழ்களில் வெளியானவை.
பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் அந்தரத்தில் நின்றபடி கண்ணாடி துடைக்கும் கிழவன் ஒருவன். அவர் சரவணா ஸ்டோரில் அடிபாடுபட்டு வேலை செய்யும் இளைஞன் பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல ஆயத்தமாகும் மனநிலையோடு தாயகம் திரும்ப எல்லாவற்றையும் சேர்த்து வைக்கிறார். காலம் அந்த முதியவருக்கு வேறோர் முடிவைத் தருகிறது.
திருமணம் செய்துகொள்ளாமல் வெறுமையாகவே வாழ்வை கழிக்கும் ஒரு எழுத்தாள முதியவரிடம் வந்து, ஒரு இளம் பெண், “உங்களை அப்பான்னு கூப்பிட்டுக்கவா?” என்கிறாள். அந்த எழுத்தாள முதியவர்க்கு முதலில் அந்த அன்பும் நெருக்கமும் பெரிய விருப்பமாய் இல்லா விட்டாலும் போகப்போக ஒரு பிடி கிடைத்ததாய் நினைக்கிறார். அவளுக்குத் திருமணம் முடியும் போதும் அவள் கணவனோடு அமெரிக்கா சென்ற பின்னும் எதோ ஒன்று அவரைப் போட்டுத் தாக்குகிறது. வாழ்வில் அரவணைப்பும் அன்பும் இல்லாமல் போவதை விட கொடுமையானது. இருந்தபின் அவற்றை இழப்பது. இந்தக் கதை மனதுக்குள் ஒரு வெறுமையையும், எதார்த்தத்தையும் எறிந்து சென்றது
சிற்சில கதைகள் பெரிய சர்ப்ரைஸ் பண்ணாவிட்டாலும் பல கதைகள் மனதை இறுக்கி அணைத்துக் கொண்டது
அசலும் நகலும் கதையில் ஒரு வேலைக்காரப் பெண் நகை போட ஆசைப்படுவதும், அந்த ஆசைக்குப் பின்னால் ஒரு வலி மிகுந்த கதையும் அகம் புதைந்த அத்தியாயம். வாழ்வு என்பது கடந்த காலம் அல்ல..எதிர்காலமுமல்ல.. அது நிகழ்காலம். என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அந்தக் கதை உணர்த்துகிறது
ஓஷோ கூட அதைத்தான் சொல்கிறார்
“காலத்தை மறந்திடு. இந்தக் கணத்தில் வாழ்ந்திடு”