வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். சமீபத்தில் வெளியான அவரது ‘யானை’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதே இதற்கு சான்று. இந்த நிலையில் GNR குமரவேல் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘சினம்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
தீவிரமான ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடித்திருக்கும் அனுபவம் குறித்து நடிகர் அருண் விஜய் பகிர்ந்திருப்பதாவது, “கோபம் என்பது நம் அனைவரிடத்திலும் எதாவது ஒரு வடிவத்தில் இருக்கும். குறிப்பாக இன்றைய சமுதாயத்தில் எதாவது ஒரு கோபம் இருந்து கொண்டே இருக்கிறது. இது தவறு, அநியாயம் என கோபமடைந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை என தெரிந்து விலகி செல்கிறோம். ‘சினம்’ படத்தின் மையக்கருவும் கிட்டத்தட்ட அது தான். கதாநாயகனை புறக்கணிக்க செய்யும் முரண்பாடுகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டவனாக இருப்பான்” என்பவர் தனது முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பிற்காக கூடுதல் உழைப்பை கொடுத்திருப்பதாக சொல்கிறார்.மேலும் அவர் பேசும்போது, “இயக்குநர் குமரவேலன் இந்த கதையை என்னிடம் சொல்லிய போது, என்னுடைய கதாபாத்திரத்தில் இருந்த தனித்துவத்தை என்னால் உணர முடிந்தது. என் கதாபாத்திரம் மட்டுமல்ல, கதையும் நன்றாகவே இருந்தது. ஆக்ஷன் காட்சிகளும் கதையோடு நன்றாக பொருந்தி போனது” என்கிறார்.
#Sinam #சினம்