கதையை பிரச்சாரமாக்குவது வேறு… ஓர் உயர்ந்த பிரச்சாரத்தை கதையாக அணுக வைக்கும் லாவகம் வேறு. தாய் நாவல் இரண்டாம் வகமைக்குள் வந்து ஆச்சர்யப்படுத்துகிறது.
நாவலை வாசித்து முடித்ததும் ஓர் உள்ள எழுச்சி ஏற்பட்டது உண்மை. நீலவ்னாவின் மகன் பாவேல் எதற்கும் உதவாமல் வாழ்ந்து மடிந்து போன தன் தந்தையைப் போல ஒருநாள் குடித்து விட்டு வீட்டுக்கு வருகிறான்.
அன்று தாய் நீலவ்னா ஒரு வார்த்தை சொல்கிறாள். உடனே பாவெல் மனம் மாறும் இடத்தில் துவங்கி சீறிப்பாய்கிறது நாவல். எங்கும் எதார்த்தம் மீறாத கதையும்..கதைக்குள் இருக்கும் நேர்மையும், போராட்டத்தின் முடிவில் வரும் நேர்மறையும் அட்டகாசம்
ஒரு மனிதன் எதுவாக பிறந்தான் என்பதல்ல விசயம்..எதுவாகப் பயணிக்கிறான் என்பதே முக்கியம். இந்தப்பயணத்தில் தாய் ஏற்படுத்தும் அதிர்வுகள் கலங்கடிப்பவை. தாய் நீலவ்னாவும் மகன் பாவெலும் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் தற்காலத்திற்கும் தேவையானவை.
“முன்னேயெல்லாம் திருடினான் என்பதற்காக மனிதர்களைச் சிறையில் தள்ளினார்கள். இப்போதோ நியாயத்தை எடுத்துச் சொன்னால் உள்ளே போடுகிறார்கள்” என்று மரியா எனும் ஒரு சாப்பாட்டுக்காரி நாவலில் பேசுகிறாள்.
யோசித்துப் பாருங்கள் .. நாவல் வந்து 115 வருடத்திற்குப் பிறகும் இந்தக் குரல் இன்றையச் சூழலுக்கு அப்படியே பொருந்துகிறது. தாய் நாவல் நம்மோடுப் பொருந்திப் போகும் ஆச்சர்யம் மட்டுமல்ல..நாம் பொருத்திக்கொள்ள வேண்டிய பொக்கிசமும் கூட.