Tamil Movie Ads News and Videos Portal

தனிமையின் நூறு ஆண்டுகள்-ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

இதுவரை வாசித்த நூல்களிலே வாசிக்கவும், உள்வாங்கவும் மிகவும் கடினப்படுத்திய நூல். தீவிர இலக்கியப் பரிச்சயமின்மையால் இந்தநூல் அடியேனை விழி பிதுங்க வைத்தது. ஆனாலும் விடாமல் நாவலைத் துரத்தினேன். 11 நாட்களில் முடித்தேன். நாவல் பற்றிய சில குறிப்புகளை எல்லாம் இணையத்தில் தேடித்தேடி வாசித்து நாவலின் சாரம்சத்தை புரிந்து இன்புற்றேன்.

மகந்தா என்ற ஒரு நகரத்தை உருவாக்கி, அங்கு ஹோசே அர்க்காதியோ புயேந்தியா தன் குடும்ப விதையை ஊன்றுகிறார். அவரின் ஏழு தலைமுறைகளின் வாழ்வும், தாழ்வும், தவிப்பும், களிப்புமாக கதை பயணிக்கிறது. அந்த நகரத்தின் வளர்ச்சியைக் கண்டதும் வளர்ச்சிப் பெற்றவர்களை வளைத்துப் போடும் அமெரிக்கா மகந்தாவை ஆக்குபை பண்ணும் நிகழ்வும் நாவலில் வருகிறது

“வால்காவில் இருந்து கங்கை வரை” நூலில், ஆதி காலத்தில் எப்படி காமம் என்பது வரைமுறைக்கு அப்பார்ப்பட்டதாக இருந்தது என்று குறிப்பிட்டிருக்குமோ அந்தக் குறிப்பிடலின் குறியீடுகளாக இந்த நாவலின் மாந்தர்கள் வாழ்கிறார்கள். ஏழாம் தலைமுறையில் நடக்கும் ஒரு திருமணமும் தாம்பத்தியமும் அதிர்ச்சி வைத்தியம்.

ஹோசே அர்க்காதியோ புயேந்தியா தன் மகன்களிடம் பனிக்கட்டியில் கை வைத்து இதுதான் உலகிலே விலை உயர்ந்த வைரம் என்கிறார். ஒரு இடத்தில் ஒரு கேரக்டர் சொல்கிறது, “காதலின் பதற்றம் படுக்கையில் தான் ஓய்வெடுக்கும்” இப்படி பல அடிப்பொலி தத்துவங்களும் நாவலில் தெறிக்கிறது. நூல் ஆசிரியர் காப்ரியேஸ் கார்சியா மார்க்கேஸ். தமிழில் மொழி மெயர்த்துள்ளார் சுகுமாரன். இருப்பதிலே இவரது மொழி பெயர்ப்பு தான் எளிமை என்றார்கள். ஆத்தீ!!

மேலும் இது மாய யதார்த்தம் என்ற வகைப்பட்ட நாவல் என்பதால் இந்நாவல் மாந்தர்கள் துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் விதங்கள் பெரும் ஆச்சர்யம் மூட்டுபவை. உர்சுலா தன் மரணத்தை ஏற்பதும் அதற்காக உவப்பதும் வாழ்வின் மீதான மரியாதையை கூட்டுகிறது. நிலையான இடம் பிடிப்பதும், இடத்தில் தடம் பதிப்பதுமல்ல வாழ்க்கை. எந்த இடமும் தடமும் நிலையல்ல என்பதே வாழ்க்கை. இதை உணரும் தருணங்களை வழங்கும் இப்படியான இலக்கியங்களை கடினப்பட்டேனும் வாசியுங்கள் என்பேன்🙏❤️