19 நாட்களாக இந்தப்புத்தகத்தோடு பயணித்தேன். கம்யூனிச நூல்களை உள்வாங்கும் திறன் குறைவான எனக்கு ரஷ்யப்புரட்சியை அங்குலம் அங்குலமாக புரிய வைத்தது இந்நூல். இருப்பினும் முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியாத பக்கங்கள் நிறைய இருந்தாலும் சில பகுதிகளின் சாரம்சம் மண்டையில் உட்கார்ந்து கொண்டது..
விவசாயிகளே, தொழிலார்களே,படையாட்களே என லெனின் தனது மேடைப்பேச்சில் உதிர்க்கும் வார்த்தைகளில் இருக்கும் நாடகமற்ற அறம் நெஞ்சில் தடமாக பதிந்தது. ஆலைகளை தொழிலாளர்கள் ஆள வேண்டும், நிலங்களை விவசாயிகள் ஆளவேண்டும். உழைப்பை அளவிற்கு அதிகமாக வாங்கிக்கொள்ளும் முதலாளி வர்க்கம் அடியோடு வீழவேண்டும். என வெகுண்டழுந்த புரட்சிப்படை எதேச்சதிகார அரசை நையப்புடைத்ததை காட்சியாக விவரிக்கிறது நூல்.
அதிகார வர்க்கத்தோடு இணைந்து வணிக சூழ்ச்சி முதல் மனிதத்தன்மையற்ற ஜார் மன்னனின் ஆட்சிக்கு எதிராக மக்களே நிகழ்த்திய இந்த 1917-ம் ஆண்டின் அக்டோபர் புரட்சி ரஷ்யாவின் யுத்தசாட்சி அல்ல.. உலக முதலாளி வர்க்கத்திற்கு எதிரான ரத்தசாட்சி💫
நூலை வாசிக்கும் முன்பாக கரண்கார்க்கி இந்நூலைப் பற்றி எழுதியுள்ள இந்தக் கட்டுரையை வாசித்துவிடுவது சிறப்பான தொடக்கமாக இருக்கும்👇
ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ – கரன் கார்க்கி
அரசுக்கு எதிராக மக்கள் ஒன்றிணையக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கும் அரசு அமைப்பு..மக்களின் புரட்சியை தடுக்க முனைகிறது . ஜெர்மனி தான் நமது முதல் எதிரி முதலில் அவர்களை வீழ்த்துவோம் என்று படைகளை மடைமாற்ற நினைத்த அரசை, மக்கள் நம்பவில்லை. நம் அரசு நம்மை ஏமாற்றுகிறது. என்பதை உணர்ந்த மக்கள் உள்நாட்டு கிளர்ச்சிக்கு தயாராகிறார்கள். பெத்ரோகிராது நகரத்தை கையகப்படுத்த போல்ஷிவுக்குகள் கொண்ட உழைப்பும் முயற்சியும் பெரு நெருப்பிற்கு ஒப்பானது. புரட்சிப் படைகளுக்குள்ளே சில புல்லுருவிகளும், சந்தர்ப்பவாதிகளும், கலகக்காரர்களும், எதிர்ப்பாளர்களும் இருந்தாலும் கூட பெரும்பான்மை மக்களுக்குள், “இந்தக் கொடுங்கோன்மை அதிகாரம் வீழ்த்தப்பட்டே ஆகவேண்டும் என்ற எண்ணத்தை போல்ஷிவுக்குகள் ஸ்ட்ராங்கா ஊன்றுகிறார்கள். அப்படியும் மக்களை மலினப்படுத்த பணக்காரர்கள் இலவசமாக மதுவைக் கொடுக்கிறார்கள். அதையும் தேடிச்சென்று உதைக்கிறது புரட்சிப்படை.
மக்களின் ஒற்றுமையை விரும்பாத பணக்காரர்கள் என்னென்ன கண்கட்டி வித்தைகளை எல்லாமோ செய்கிறார்கள்.அதையும் தாண்டி நடக்கிறது ரஷ்யப்புரட்சி..
நம் ஊரில் அரசைப் பற்றி அறத்தோடும் அறிவோடும் ஒரு கேள்வி கேட்டால், “அங்கு எல்லையில்….” என்று சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்வார்களே அதைப்போன்ற காட்சிகள் ரஷ்யாவிலும் நடைபெறத்தான் செய்திருக்கிறது.
இந்த நூலை எழுதிய ஜான் ரீடு ஒரு அமெரிக்க கம்யூனிஸ்ட். முதலாளி வர்க்கத்தின் மொத்த உருவமான அமெரிக்காவில் “சிகப்புச் சட்டை” ஒருவர் வடித்த இந்தநூல் மக்களுக்கு எதிரான அதிகாரத்தை அச்சுறுத்தும் பிசாசு..
தீ வைக்கத் துணிகிறார்கள். அணைக்க நீர் தேடுவோமா? இல்லை ஓடுவோமா? என்று குழம்பும் மக்களுக்கு நெருப்பை தாண்டி நெருப்பூட்டியவர்களை விரட்டியடிக்கும் வல்லமையை வழங்கும் புரட்சி தேவதை இந்நூல்.
#UlagaiKulukkiyaPaththuNaatkal #உலகைக்குலுக்கியபத்துநாட்கள்