Tamil Movie Ads News and Videos Portal

வானம் வசப்படும்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

புதுச்சேரியை ஆண்ட ஒரு பிரெஞ்சு கவர்னரின் மிகச்சிறந்த ஆலோசகரான ஆனந்தரங்கரின் வாழ்க்கைக் குறிப்பாக விரிகிறது இந்நாவல்.

200 ஆண்டுகளுக்கு சற்று முன்பே ஆன காலகட்டத்து நாவல் (1740-50) . புதுச்சேரியைச் சுற்றும் ஆங்கிலப்படைகள். புதுச்சேரி தன்வசம விட்டுப் போய்விடக்கூடாது என்று உறுதியாய் இருக்கும் கவர்னர் (நாவலில் குவர்னர் என்கிறார்கள்) துய்ப்ளெக்ஸ். அவரின் உற்ற துணையான தமிழர்களின் தலைவரான ஆனந்த ரங்கப்பர். துய்ப்ளெக்ஸ் மொழியில் சொன்னால் ரங்கப்பா

இந்த ரங்கப்பா பாத்திரத்தை தான் நாவல் அடியொற்றி நடக்கிறது. என்னது நாவல் நடக்கிறதா? பாயவில்லையா? என்று கேட்டால் பிரபஞ்சனின் இந்த நாவல் நடை அதீத பொறுமையைக் கொண்டுள்ளதாக அமைந்திருக்கிறது. மெயின் கதையை விட்டு டக்கென வேறோர் கிளைக்கதைக்குச் சென்று, அங்குமிங்குமாக மனிதமனம் போல கதை அலைபாய்கிறது. அதே சமயம் பல வரலாற்று நிகழ்வுகளை அட்டகாசமாகப் பதிவு செய்தும் போகிறது

ஆனந்தரங்கர் சுத்த வைணவர். கவர்னர் துய்ப்ளெக்ஸின் வலது கை அவர். ஆயினும் அவரின் விருப்பம் இன்றி கவர்னர் மனைவியின் சூழ்ச்சியோடும், கவர்னரின் சம்மதத்தோடும் பாரம்பரியம் மிக்க புதுச்சேரி சிவன் கோவில் கிறிஸ்தவர்களால் இடிக்கப்படுகிறது. ரங்கப்பர் வருத்தம் கொள்கிறார். சிவ பக்தர்கள் எல்லாம் குமுறிக்கொண்டு வந்து ரங்கப்பரிடம் முறையிடுகிறார்கள். ரங்கப்பர், “கவர்னருக்கு வாய்த்த மனைவி செய்த வினை இது” என்று சொல்கிறார். சிவ பக்தர்கள் “நீர் வைணவர் என்பதால் அல்லவோ சிவன் கோவில் இடிபடுவதை ஏற்கிறீர்” என்பதாக ரங்கப்பரிடம் கேட்கிறார்கள். நாவலில் வரும் இந்தக் காட்சி சைவ vs வைணவ பாரபட்சத்தை மைல்டாகத் தொட்டது. மனித மனம் தன்னையும் அறியாமல் சில நேரம் குரூரங்களை ஒரு கணமேனும் ரசித்துவிடும் என்பதற்கு ஒரு சாட்சி இந்தக்கட்டம்

அதேபோல் அன்றைய கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தை நுட்பமாக கையாண்டதையும், மதம் மாறின நம்மவர்கள் ஜாதி பாகுபாட்டில் கண்ணும் கருத்துமாக இருந்ததையும் துல்லியமாக பதிவு செய்துள்ளார் பிரபஞ்சன்

ராபர்ட் க்ளைவ் அறிமுகமாகும் அத்தியாயமும், அவரை வளர்த்துச் செல்லும் பக்கங்களும் அபாரம். எனினும் அவரது கேரக்டரை துய்ப்ளெக்ஸுக்கு நேரெதிராய் நிறுத்தி ஒரு பரபர சீக்வென்ஸ் வந்திருக்கலாமோ எனத் தோன்றியது (சினிமா புத்தி)

கதைகள் வரலாறு ஆகக்கூடாது. உண்மைகள் தான் வரலாறாக வேண்டும் என்ற வேட்கை கொண்டவன் அடியேன். இந்த வரலாற்றில் வந்துள்ள மனித மனங்களைப் பார்க்குங்கால் உண்மை நிறைய இருப்பது புலனாகிறது. 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்களின் மனோபாவம், தேவரடியாள்கள் நடத்தப்பட்ட விதம், அண்டிப்பிழைப்பதும், அடித்துப் பறிப்பதும் தவறு என நினைக்கும் சிலர், கவர்னரின் நிழலாய் இருக்கும் அவரின் மனைவி செய்யும் அக்கிரமங்கள், இப்படி நாவல் நிறையவற்றைப் பதிவு செய்கிறது

கவர்னரின் மனைவியான ழான் மாதம் செய்யும் பித்தலாட்டங்கள் எல்லாம் ஒரு மிகச்சிறந்த வில்லி கேரக்ட்ரேசனாக்கும்

ரங்கப்பர் அவளை எப்போதும் முண்டை என்றே குறிப்பிடுகிறார். காரணம் அவளின் அறமற்ற செயலாக இருந்தாலும், “பொம்மனாட்டி ஒருத்தி இப்படி எல்லாரையும் போட்டுப் பொளக்கிறாளே” என்ற வன்மமும் கொஞ்சூண்டு உண்டு. இதை ரங்கப்பருக்குத் தெரியாமல் அவர் மனசாட்சியிடம் கேட்டால், அவர் ஸ்டைலிலே அது சொல்லும்

அது உள்ளது!