Tamil Movie Ads News and Videos Portal

சினிமாவை அழித்து விடாதீர்கள் : நடிகர் நகுல் பேச்சு!

5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார்.வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த
‘ வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள்.

விழாவில் நாயகன் நகுல் பேசும் போது,

“முதலில் இங்கு வந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நட்பு வட்டம் சிறியது தான். ஆனால் என்றும் நான் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன். அதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன் முன்பெல்லாம் நான் புலம்புவதுண்டு. வாழ்க்கை இப்படியே போகிறது என்று.

எனது வாழ்க்கை எங்கே தொடங்கி எங்கே போகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. மும்பையில் பள்ளியில் படித்த போது அக்கா இங்கே நடிக்க வந்து விட்டார். அவருக்காக, அவர் அழைத்ததால் இங்கு வந்து விட்டோம்.
நான் முதலில் பைலட் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டு முயன்றேன் . பிறகு விஸ்காம் சேர்ந்தேன். அதுவும் ஒரு காதலுக்காக மாறினேன். அதுவும் நிறைவேறவில்லை.
ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன் .அதற்காக எடையெல்லாம் குறைத்தேன்.அதுவும் நடக்கவில்லை .

ஏதோ ஒரு அதிர்ஷ்டம், ஏதோ ஒரு ஆசீர்வாதம் காரணமாக இங்கு வந்து சேர்ந்து விட்டேன்.

ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் தான் பாய்ஸ் படத்தில் நடிக்க வந்தேன். பிறகு காதலில் விழுந்தேன் வந்தது. நான் ஒன்று நினைத்தால் எல்லோரும் இன்னொன்றை என்னிடம் ரசித்தார்கள். நான் பாடலாம் என்றால் அவர்கள் நகுல் நன்றாக ஆடுகிறார் என்றார்கள்.

படத்தில் எனது சண்டைக்காட்சிகள் இருந்தபோது நான் பயந்தேன். ஆனால் அவர்களோ என் நடனத்தை ரசித்தார்கள்.
பல தடைகள் தாமதங்களுக்குப் பிறகு எப்படியோ அடுத்தடுத்த படங்கள். இப்படித்தான் மாசிலாமணி வந்தது, பிறகு வல்லினம் வந்தது.

சில மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் கூட இருந்தேன் .ஒரு கட்டத்தில் புலம்பதில் பயனில்லை என்று புரிந்தது. எதெது எப்போது நடக்குமோ அதது அப்போது நடக்கும் என்கிற தெளிவு வந்தது.

இரண்டு மணி நேரம் சிரிக்கச் சிரிக்க இந்த வாஸ்கோடகாமா படத்தின் கதையைச் சொன்னார் ஆர்ஜிகே. அதேபோல் எடுத்துள்ளார். இதுவரை நான் நடிக்காத டார்க் ஹ்யூமர் கதை இது . இப்படத்தில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இயக்குநர் நம்பிக்கையை விடவில்லை .என்னை அவர் நம்பினார் ,அவரை நான் நம்பினேன் .தயாரிப்பாளர் எந்தக் குறையும் வைக்கவில்லை.

என்னுடைய வாழ்க்கை என்னுடைய வழி, இதுதான் எனது கொள்கை. இப்படித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன் .

நான் என்னென்னவெல்லாமோ கற்பனை செய்தேன்.
நான் எப்போதும் நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை எல்லாம் நல்ல நேரம் தான் என்று நினைக்கிறேன். நான் நினைத்துப் பார்க்கிறேன் அந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் எப்போதும் என்னைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன்.

சினிமாவில் விமர்சனம் கூடாது என்பது அல்ல ,அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சினிமா நூற்றாண்டு கண்டு விட்டது. இதை நம்பி பலபேர் இருக்கிறார்கள். இங்கே யாரும் பர்பெக்ட் கிடையாது. எல்லோரிடமும் குறைகள் உள்ளன. விமர்சனம் என்கிற பெயரில் சினிமாவை அழித்து விடாதீர்கள்.

ஆகஸ்ட் இரண்டாம் தேதி என் மகளது பிறந்த நாள். அன்று இந்தப் படம் வெளியாக உள்ளது கூடுதல் மகிழ்ச்சி ” என்றார்.

இவ்விழாவில்,படத்தைத் தயாரித்திருக்கும் டத்தோ. பா. சுபாஸ்கரன், நாயகி அர்த்தனா பினு,இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பயில்வான் ரங்கநாதன்,பாய்ஸ் மணிகண்டன், வாழ்த்த வருகை தந்த சாந்தனு, ஜெகன் ,படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் யுவராஜ், இசையமைப்பாளர் அருண் என்.வி ,ஒளிப்பதிவாளர் என். எஸ். சதீஷ்குமார், எடிட்டர் தமிழ்குமரன் , கலை இயக்குநர் ஏழுமலை ஆதிகேசவன், பாடகர் அந்தோணி தாஸ்,இணைத் தயாரிப்பாளர் கோபிநாத் நபராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.முன்னதாகத் தயாரிப்பாளர் டத்தோ பா. சுபாஸ்கரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.