அதிகாரத்தை எதிர்த்து சாமானியன் எழுப்பும் குரலில் அறம் , ஆதாரம் எவ்வளவு இருந்தாலும்…அதிகாரம் நினைத்தால் நம் அடையாளத்தை எளிதாக அழித்துவிடும் என்ற நிதர்சனத்தைப் பேசுகிறது வேள்வி.
அண்ணன் சவுக்கு சங்கர் Savukku Shankar எழுத்தில் காதல் எட்டிப்பார்ப்பது இந்த நூலில் தான் என நினைக்கிறேன். வேள்வியில் வரும் வசந்தி யாரென்று தெரியவில்லை. ஆனால் அந்த வெங்கட் கேரக்டர் சவுக்கு ப்ரதரே தான். நாவலின் முடிவு மட்டும் அவருக்கானதல்ல! அவருக்கானதாகவும் இருக்கக் கூடாது
50 கோடிக்கான சொத்துக்கணக்குக் கூட காட்டாத ஒரு நிறுவனத்திற்கு மத்திய மந்திரி சிங்காரவேலு 1200 கோடி லோன் கொடுக்கச் சொல்கிறார். முடியாதென மறுத்த வங்கி மேனஜருக்கு பெரும் அழுத்தம் வரவைக்கப்படுகிறது. லோனைக் கொடுத்து விடுகிறார். அடுத்து அந்த வங்கிக்கு மேனஜராக வரும் வெங்கட் கவனத்திற்கு பழைய மேனஜர் சாமர்த்தியமாக சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் கிடைக்கிறது. அந்த ஆவணங்களை வைத்து மந்திரி சிங்காரவேலுவின் மாபெரும் ஊழலை அவன் வெளியில் கொண்டு வருகிறான். மந்திரிக்குப் பேர் கெட்டுப்போனாலும் அவரை தற்காலிகமாக ராஜினாமா செய்யவைத்து மக்கள் மறந்த கொஞ்ச நாட்களிலே உள்துறை மந்திரியாக பதவி உயர்த்திக் கொடுக்கிறது அரசு.
அதன்பின் சிங்காரவேலு அதிகார வேலுவாக மாறி வங்கி மேனஜரான வெங்கட்டை என்னவெல்லாம் செய்கிறார் என்பதை தான் ரோஸ்ட்கோலர் வேகத்தில் சொல்லியிருக்கிறார் சவுக்கு சங்கர்.
அதிகாரத்தில் இருப்பவனின் குற்றங்களைக் கொடூரங்களை தக்கச் சாட்சியோடு கண்டாலும் மூடிக்கிட்டு கம்னு இருந்தால் மட்டும் தான் இங்கு காலம் தள்ள முடியும் என்ற பாசிச நிர்வாகம் நம் நாட்டில் வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன என்பதை இந்நாவலின் முடிவு உணர்த்துகிறது.
உழைக்கும் வர்க்கத்தின் ஓர் அடையாளம் எனச்சொல்லப்படும் இடதுசாரி இயக்கங்கள் கூட “ஐயம் வெரி ஸாரி” என்று அரசுக்கு அடிபணிவதையும் விட்டு வைக்கவில்லை நாவல். அதே சமயம் அறம் காக்கும் மனிதர்களையும் அடையாளங்காட்ட தவறவில்லை.
மின்னல் வேக எழுத்து நடை..வாசிக்க எங்கும் சலிப்பு ஏற்படாத வகையிலான கதையின் போக்கு என ஒரு அட்டகாச திரைக்கதை இந்த நாவலில் இருக்கு. புனைவு என்று சொல்லப்பட்டாலும் அத்தனை விசயங்களும் எதார்த்தத்தோடுப் பொருந்திப் போவது ஆகச்சிறப்பு.
நாவலில் நிறைய உணர்ச்சிக் கொந்தளிப்பான இடங்கள் இருந்தாலும் வெங்கட் வசந்தி காதல் அத்தியாயங்கள் பெரும் ஆறுதல்..அங்கங்கே நகைச்சுவைக்கும் குறைவில்லை..
உதாரணத்திற்கு ஒன்று..
“எதற்காக இந்தப்பெண்கள் இவ்வளவு நீளமாக நகத்தை வளர்க்கிறார்கள்?
தன்னை ஒருவன் பலாத்காரம் செய்ய முற்படும் போது ஒரு பெண் தன் பற்களையும் நகங்களையும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று காந்தி சொன்னதை அவ்வளவு சீரியசாகவா எடுத்துக் கொள்கிறார்கள்? காந்தி ஒருவேளை எதாவது நெயில் பாலீஷ் கம்பெனியின் விளம்பரத்திற்காக அப்படிச் சொல்லியிருப்பாரோ?”
வங்கி மேனஜராகவே இருந்தால் வெங்கட்டிற்கு இப்படியான சந்தேகம் வந்திருக்காது. அந்த வெங்கட் இடையில் பத்திரிகையாளர் ஆகிவிடுவார். அதான் இப்படி.
நல்ல நாவல்..நல்ல வாசிப்பனுபவம்