Tamil Movie Ads News and Videos Portal

தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் ‘யோசி’!

J&A Prime Productions தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘யோசி’. இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தற்கொலை முடிவு எடுக்கும் மாணவன் ஒருவன் மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். முயற்சி தோல்வியடைய அந்த காட்டில் இருந்து தப்பி உயிர் பிழைக்க மிகப்பெரிய உயிர் போராட்டத்தில் இறங்குகிறான். அவனுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது, அவற்றிலிருந்து அந்த மாணவனால் தப்பிக்க முடிந்ததா என்பதை மையப்படுத்தி விறுவிறு திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

இந்த படம் பற்றி படத்தின் நாயகன் அபய் சங்கர் கூறும்போது, “கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடிப்பில் பல சாதனைகளை செய்த நடிகை ஊர்வசியின் நெருங்கிய உறவினர் நான். கொரோனா காலகட்டத்தில் ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்கி ஜான்சன் மூலமாக இந்த படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஜோசப்பை சந்தித்தேன். நடிக்கும் எண்ணம் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்தது. அதுமட்டுமல்ல ஊர்வசி, கலாரஞ்சனி, மறைந்த நடிகை கல்பனா என சகோதரிகள் மூவரும் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் நம் குடும்பத்திலிருந்து இன்னொருவர் நடிப்புத்துறைக்கு வரவேண்டும் என்று எப்போதுமே என்னை ஊக்கப்படுத்தி வந்தார்கள். அதற்கேற்றபடி இறுதி நேரத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தவர் இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது நானே கதாநாயகனாக மாறினேன்.

எனக்காக மட்டுமல்ல, கதைக்காகவும் இந்த படத்தில் ஊர்வசியும் அவரது சகோதரி கலாரஞ்சனியும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் குறித்து அவர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.கதாநாயகி ரேவதி வெங்கட் மும்பையை சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை. இந்த படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். அதேசமயம் நிறைய விளம்பர படங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு இருக்கிறது.. இந்தி பிக்பாஸ் சீசனில் இறுதி போட்டியாளராக வந்த அர்ச்சனா கெளதம் இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் நான்கு விதமான பாடல்களுக்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். ஏர்டெல் சூப்பர் சிங்கர் கே.ஜே.அய்யனார் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராமக்கல் மெட்டு மலைப்பகுதியில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் எந்த வசதிகளும் இல்லாத அந்த மலைப்பகுதியில் தினசரி நான்கு கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்தினோம். அடர்ந்த காடு, வனவிலங்குகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு இடையே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

முக்கியமான ஒரு காட்சியில் செங்குத்தான மலைப்பகுதியில் நான் கீழ்நோக்கி ஓடி வரும்போது திடீரென கால் தவறி சரிவில் உருண்டு மரத்தில் மோதி எனது நெஞ்சில் பலத்த அடி விழுந்தது . ஆனாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்” என்றார். தமிழில் உருவாகியுள்ள இந்த படத்தை கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளியிடவும் வேலைகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து பாடகர் கார்த்திக் பாடிய அன்பே அன்பே என்கிற லிரிக் பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருக்கிறது. A V I மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து J & A பிரைம் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை மார்ச் இறுதியில் வெளியிடும் திட்டத்தில் செயல்பட்டு வருகின்றனர்.