மலையாளப் படத்தை தமிழில் வெளியிடும் கார்த்திக் சுப்புராஜ்
‘ஒளிவுதெவசத்தே களி’ என்கின்ற சிறப்பு வாய்ந்த மலையாளப்படத்தை எடுத்தவர் இயக்குநர் சணல்குமார். இவரின் அடுத்த படைப்பாக உருவான “செக்ஸி துர்கா” திரைப்படத்திற்கு அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டு, திரைப்படவிழாக்களில் இப்படம் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அந்த இயக்குநரின் மூன்றாம் படைப்பாக ”சொள” என்கின்ற படம் உருவாகியிருக்கிறது. இதில் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் நிமிஷா சஜயன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் அதே தேதியில் இப்படத்தை தமிழில் ‘அல்லி’ என்கின்ற பெயரில் வெளியிட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முயன்று வருகிறார். தற்போது இவர் தனுஷை வைத்து இயக்கி வரும் படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.