Tamil Movie Ads News and Videos Portal

சூதாடி-ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

ஒரு தேர்ந்த மனிதன் கூட சலனப்பட்டு தன் ஆதியந்தத்தை இழக்குமிடம் சூதாட்ட இடம் தான். வாழ்வில் தோற்ற பின்னும், நம்மை பின் தொடர்வது சூதாட்டம் தான். இது எவ்வளவு பெரிய மன வன்முறை கொண்டது. இதனால் “சூதாடாதே” என்று அறிவுறுத்தவில்லை நாவல். சூதாட்டம் விளைவிக்கும் மூர்க்கத்தை, மன விநோதத்தை, அலெக்சேய் இவானவிச் மற்றும் ஓர் மூதாட்டியின் வாழ்க்கைப் பயணம் மூலமாக அகத்தில் அறைந்து உணர்த்துகிறது நாவல்.

ரஷ்யரான அலெக்சேய் இவானவிச் ஜெர்மனியில் ஜெனரல் ஒருவரிடம் அவர் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராகப் பணி செய்கிறார். அவருக்கு ஜெனரலின் அண்ணன் மகள் பலீனா மீது காதல். பலீனாவிற்கு ப்ரெஞ்ச் ஆள் தெ கிரியே மீது நாட்டம். ஜெனரலுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்திருப்பவர் தெ கிரியே. ஆஸ்ட்லே என்ற ஆங்கிலேயருக்கும் பலீனா மீது மோகம். சற்று வயது அதிகமான ஜெனரலுக்கு ப்ளான்ஷ் என்ற பேரழகியை தனதாக்கிக் கொள்ள எண்ணம். ப்ளான்ஷின் ஒரே நோக்கம் பணம் மட்டுமே. அந்தப்பணம் ஒரு கட்டத்தில் சூதாட்டம் மூலம் நாயகன் அலெக்சேய் இவானவிச் வசம் வந்துசேர ஜெனரலை தூக்கியெறிந்து அவரிடம் வேலை செய்த அலெக்சேய் இவானவிச்-ஐ அழைக்கிறாள். பலீனா மீது கொண்ட காதலில் ஏற்படும் விபத்தால் அலெக்சேய் இவானவிச் ப்ளான்ஷின் உடன்பாட்டுக்கு உடன்படுகிறார். ஆஸ்ட்லே வசம் பலீனா செல்லும் காரணியும், தன் கடன்களை அடைப்பதற்காக தன் மாமியான மூதாட்டியின் மரணத்தை எதிர்நோக்கும் ஜெனரலின் மன தாபமும், ஜெனரலின் சபலத்தை அறிந்து உயிர்த்தெழுந்து வந்து சூதாட்டத்தில் சொத்தை இழக்கும் மூதாட்டியின் செய்கைகளும், அதன்பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் என நாவல் அசூரப்பாய்ச்சலில் செல்கிறது

வெற்றியையும் தோல்வியையும் மாறிமாறி தரும் சூதாட்டத்திற்கு மனித மனதை சூன்யமாக்கும் சூட்சமம் தெரியும். இதை மிக அழகாக எடுத்துரைத்துச் செல்கிறது நாவல். சந்தர்ப்பங்களை சரிவர (தனக்கு மட்டும்) பயன்படுத்தும் ப்ளான்ஷும், சந்தர்ப்பங்கள் தரும் நல்ல வாழ்வை பயன்படுத்த தெரியாத மனிதர்களும் இந்த நாவலில் வாழ்வே ஒரு சூதாட்டம் தான் எனச் சொல்கிறார்கள்.

சென்ற வருடம் செத்துப்போன எங்கள் ஊரைச் சேர்ந்த சக்கா சித்தப்பா, பல வருசம் முன்னாடி வரைக்கும் ஊர்ல திருவிழா கபடின்னா ஒரு தகரடப்பாவில மண்ணெண்ணய் ஊத்தி தீகொளுத்தி கட்டை அடிப்பார். ஆஸு, ஆர்ட்டீன், க்ளவர் என காசுகளை சுற்றியிருக்க ஆட்கள் வைப்பாங்க. ஒரு தடவை அழகேசன்ணன் கூட நானும் கட்டை விளையாடப் போயிருக்கேன். 5 ரூபாயை வச்சு 200 ரூபா வரை ஜெயிச்சான் அழகேசண்ணன். அது ஒரு நைட்டு திருவிழா. அன்னைக்குத் தின்ன போண்டாவுக்கு அளவே இல்லை. அழகேசண்ணனை கையிலே பிடிக்க முடியல. நான் என்னோட எதிர்காலம் இனிமே கட்டை விளையாட்டுத்தான்னு தீர்மானம்லாம் பண்ணேன். காலப்போக்குல அடுத்தடுத்து பலரும் அதில் வாழ்ந்து வீழ்ந்தையும், வாழ்ந்துருவோம் என்ற அசட்டுத் தைரியத்துல வீழ்ந்ததையும் கண்டிருக்கேன். அந்தக் காட்சிகளை எல்லாம் இந்த நாவல்ல வந்த காட்சிகளோடு ஓட்டிப்பார்த்தேன். ப்ளாஷ்பேக்கை ஓட்டிப்பார்த்து ஓட்டிப்பார்த்து வாழ்க்கையை ஓட்டும் போது ஒன்னு மட்டும் தெரியுது.

போலி அதிர்ஷ்டத்தால் வர்ற எதுவும் அது இஷ்டத்துக்கு சொல்லாம கொள்ளாமல் கிளம்பி போய்க்கிட்டே இருக்கும்.

#suthadi #சூதாடி