பண்பாட்டு ரீதியான படைப்புகளை வரவேற்கும் மனநிலையை மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்..அதே சமயம் நம் பண்பாடு சார்ந்த விசயங்களைப் படமாக்கும் போது அதை கலை நேர்த்தியோடு இயக்குநர்கள் படைக்க வேண்டும். Ok இந்தப்படத்தின் விமர்சனத்திற்கு வரலாம்
மதுரையில் அரை வயிற்றுக்கூலி கிடைத்தாலும் தன் மேளதாள ஆட்டக்குழுவை அறத்தோடு நடத்தி வருகிறார் முனிஷ்காந்த். அதே ஊரில் அதிகாரத்தை வைத்து ஆட்டம் போட்டு வருகிறார் மைம்கோபி. முரட்டு பேச்சுலரான முனிஷ்காந்தின் தம்பி ஹரி ஒரு பெண்ணை காதலிக்கிறார். தம்பிக்கு கல்யாணம் செய்து வைப்பதில் ஒரு சிக்கல் எழுகிறது. அதை காடப்புறா கலைக்குழு எப்படி எதிர்கொள்கிறது என்பதே கதை. மேலும் சிலபல கிளைக்கதைகள் படத்தில் உண்டு!
கதையின் நாயகனாக முனிஷ்காந்த் கவரவே செய்கிறார். ஒரு ஆட்டக்கலைஞரின் உடல்மொழியை தனக்குள் கொண்டு வந்துள்ளார். தவில் அடிக்கும் கேரக்டரில் வரும் காளி வெங்கட் கவனம் ஈர்க்கிறார். மைம்கோபி,ஹரி, ஆத்தங்குடி இளையராஜா உள்ளிட்ட அனைவரும் நடிப்பால் கவர்கிறார்கள்
நாட்டுப்புறக் கலையை கதைக்களனாக வைத்துள்ள படங்களுக்கு பாடல்கள் தான் ஜீவன். அதை ஓரளவு உணர்ந்து உழைத்துள்ளார் இசைஞர். பின்னணி இசையும் பரவாயில்லை. ஒளிப்பதிவில் நல்ல நேட்டிவிட்டியும் நேர்த்தியும் இருந்தது
சின்னக் கதையாக இருந்தாலும் அதை நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வோடு சொல்ல நினைத்த இயக்குநரின் ஆர்வம் பாராட்டுக்குரியது. இன்னும் வசனங்களில் மதுரை வட்டார வழக்கின் நய்யாண்டிகளையும், திரைக்கதையில் விறுவிறுப்பையும் சேர்த்திருக்கலாம். ஆட்டக்காரர்கள் பற்றிய பொது சமூகத்தின் பார்வையை சில காட்சிகளில் பதிய வைத்திருந்தாலும், இன்னும் அழுத்தமான காட்சிகளை அமைத்திருக்கலாம். பெரும் புயலாகவும் இல்லாமல் இதமான தென்றலாகவும் இல்லாமல் திசை மாறிவிட்டது படம். இருப்பினும் இப்படியான நல்ல முயற்சிகளை வரவேற்போம். இனிவரும் படைப்புகளில் இயக்குநர் ராஜா குருசாமி கவனிக்க வைப்பார் என்று நம்பி வாழ்த்துவோம்
#Kaadapurakalaikuzhu
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்