Tamil Movie Ads News and Videos Portal

கம்பாநதி -ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

ஒரு வீட்டில் வசிக்கும் இருவருக்கோ மூவருக்கோ உடலில் முகத்தில் பல ஒற்றுமைகள் இருக்கக் கூடும். ஆனால் ஒருபோதும் மனம் ஒத்ததாக இருக்காது. அதே சமயம் அதை கண்டுபுடிக்கவும் முடியாது. உடலளவில் ஒட்டிக்கொண்டு பேசும் இருவருக்குள் மனம் ஒட்டவே முடியாத தூரத்தில் நிற்கும். இது எதார்த்தமான ஒன்று. காலம் முழுதும் சேர்ந்திருப்பதாலே இருவரின் மனமும் சேர்ந்திருந்தது என்று சத்தியம் செய்ய முடியாதில்லையா?

நாம் அடியாழத்திற்குள் நினைக்கும், யாருக்குமே பகிரமுடியாத ஒரு விசயத்தை எழுத்தாக்குவது சாத்தியமற்ற சங்கதி. அதைச் சரளமாக செய்யக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவர் வண்ணநிலவன்.

வாழ்க்கையில் எல்லாமே ட்ரெண்ட்க்கு ஏற்றமாதிரி மாறும் சேரும் தீரும். ஆனால் மனிதனின் சிலபல அடிப்படையான குணங்களுக்கு எப்போதும் ஒரே ட்ரெண்ட் தான்.

இந்த நாவலில் வரும் சங்கரன் பிள்ளை மரகதத்தைக் கட்டிக்கொண்டு மூன்று பிள்ளைகளைப் பெற்றபின், இன்னொருவனின் மனைவியான செளந்தரம் மீது காதலாகிறார். அந்தக் காதல் பித்தேறி கணவனை விட்டு வருகிறாள் செளந்தரம். சங்கரன் பிள்ளைக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல், மரகதம் மற்றும் பிள்ளைகளை விட்டுட்டு செளந்தரம் அருகில் தூங்க முடிகிறது. கல்யாண வயதில் இருக்கும் சிவகாமியை வேலைக்கு அனுப்பி வைத்தும் சோற்றுக்கு தடுமாறும் மரகத்திடம் கட்டக்கடைசியாக இருக்கும் பொட்டுத்தங்கத்தை ஏமாற்றி வாங்கிவந்து சீட்டாடி தீர்க்கும் நெஞ்சுரம் சங்கரன் பிள்ளைக்கு மட்டும் அல்ல..நிறைய பிள்ளைகளுக்கு இன்றும் இருக்கிறது தானே!

திருநெல்வேலி தச்சநல்லூர், தாமிரபரணி ஆகிய நிலப்பரப்பில் கதை நிகழ்வதால் நெஞ்சை நிறைத்துச் சென்றது இந்த நூல்

பாப்பையாவும் கோமதியும் இந்த நாவலில் காதலர்களாக வருகிறார்கள். வலிந்து திணிக்காத ஒரு வலியை அவர்களின் பயணம் வழியே உணரும் போது பாறையில் தகிக்கும் அனல் நெஞ்சுக்குள்.

இந்த நாவலெங்கும் மனங்களை அலசும் மாயவித்தை கொட்டிக்கிடக்கிறது. எனக்கு இந்த நூலில் வரும் ஒரு பத்தி நெஞ்சை சுற்றி சுற்றி வருகிறது..

இதான் அது

“நல்ல வேளையாக மனித வாழ்க்கை அசையாத ஒன்றாக இல்லை. எப்படியோ ஆச்சர்யப்படும் விதமாக அது நகர தெரிந்து வைத்திருக்கிறது. இதுவொரு பெரிய விசயம் தான்”❤️