மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம். Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
அயோத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு பட நிறுவனம் கேடயம் வழங்கி கௌரவித்தது. இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.
இவ்விழாவினில் நடிகர்-இயக்குநர் சசிகுமார் பேசியதாவது…
இந்தப்படம் ஓடிடிக்கு விற்றதால் அவசரமாக வெளியிட வேண்டிய சூழ்நிலை. எந்த புரமோசனும் செய்யவில்லை. ஆனால் ரவீந்திரன் சார் முடிந்த அளவு நிறைய தியேட்டர்கள் போடுகிறேன் என்று அவரால் முடிந்த அத்தனையும் செய்தார். படம் வெளியானதே நிறைய பேருக்கு தெரியவில்லை. ஆனால் பத்திரிகை நண்பர்கள் பாராட்டி எழுத ஆரம்பித்த பிறகு பலர் கவனிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் தங்கள் படமாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்தப்படம் குறித்து மந்திரமூர்த்தி சொன்னபோதே இதன் ஆழம் எனக்கு புரிந்தது. இந்தப்படத்தை மகேந்திரன் சாருக்கும், பாலு மகேந்திரா சாருக்கும் போட்டுக்காட்ட எனக்கு ஆசை. அவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக காட்டியிருப்பேன். மகேந்திரன் சார் நண்டு என ஒரு படம் எடுத்தார். அதில் இதே போல் இந்தி கதாப்பாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள். அப்போதே அதைச் செய்து விட்டார், ஆனால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்ளாததால் அது படத்தில் வரவில்லை. இந்தப்படம் மூலம் அவர் ஆத்மா சாந்தியடையும். படம் பார்த்துவிட்டு நிறைய பிரபலங்கள் பாராட்டினார்கள். ரஜினி சார் போன் செய்து பாராட்டினார். நண்பர் சிம்பு பாராட்டினார். ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை இந்தப்படம் காட்டியுள்ளது. நான் இனிமேல் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். எல்லோருக்கும் நன்றி.
#Ayothi #அயோத்தி