7-ஆம் நூற்றாண்டு போர் சம்பவங்களில் சற்று புனைவு கலந்தால் அதுதான் யாத்திசை
இரு மன்னர்களுக்கான பெரும் போர்களில் கண்ணுக்குத் தெரியாத சிறுகுடியினர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒரு கட்டத்தில் தமது வீழ்ச்சிக்கு காரணமானவர்களை நாமே அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணமும் கட்டயாமும் வரும். பின் அவர்கள் ஒரு முடிவெடுத்து பெரும் மன்னர்கள் மீது போர் தொடுப்பார்கள். இப்படியான நிஜப் பின்னணியில் இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தரணி ராசேந்திரன்.
ரணதீர பாண்டியனை வீழ்த்த முடிவெடுக்கிறது எயினர் படை. எயினர் படையின் எழுச்சியை பாண்டியன் ரணதீரன் எப்படி முறியடித்து முன்னேறுகிறான் என்பதே இப்படத்தின் மையச்சரடு
இப்படத்தின் களமும் செய் நேர்த்தியும் பிரமிக்க வைக்கிறது. சிறு நடிகர்களை கொண்டு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர். ரணதீர பாண்டியனாக ஷக்திமித்ரன் காத்திரமான நடிப்பை கொடுத்துள்ளார். ஒரு பெரு வீரனுக்கான உடலை வடிவமைத்ததிலும் அவர் கவனம் ஈர்க்கிறார். அவரைப் போலவே எயின தலைவனாக வரும் சேயோன் அட்டகாசமாக நடித்துள்ளார். ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர் என படத்தில் நடித்துள்ள அத்தனை நட்சத்திரங்களும் அசத்தியுள்ளார்கள்
படத்தின் மற்றொரு பலம் டெக்னிக்கல் டீம். சிறு பட்ஜெட்டிலே இவ்வளவு துல்லியமான வேலைப்பாடுகளை செய்துள்ளார்கள். ஒளிப்பதிவும் சரி பின்னணி இசையும் நேர்த்தியாக அமைந்துள்ளது. பாடல்கள் சற்று ஏமாற்றம். வெ.சுரேஷ் குமார் உடை வடிவமைப்பில் கவனிக்க வைத்துள்ளார். ஓம்.சிவ பிரகாஷின் சண்டைக்காட்சிகள் அமர்க்களம். ஷார்ப்பான எடிட்டிங்கும் படத்திற்கு பலம். இரஞ்சித் குமாரின் ஆர்ட் டைரக்ஷன் அற்புதமாக கைவந்துள்ளது
கதையின் போக்கு எங்குமே பிசிறு தட்டவில்லை. மிகச்சீராக கதை பயணிக்கிறது. திரைக்கதையில் ட்விஸ்ட் மற்றும் ஒருங்கமைக்கப் பட்ட எமோஷ்னல் ஆகியவை சரியாக கை கூடவில்லை. அதை மட்டும் இயக்குநர் சிரமேற்கொண்டு செய்தியிருந்தால் யாத்திசை எத்திசையிலும் வெற்றிசை கொட்டியிருக்கும்.
மிகச்சிறந்த ஆக்கம், தெளிவான நோக்கம், அளவான நடிப்பு, மிக வித்தியாசமான புதிய முயற்சி, புதியவர்களின் மலைக்க வைக்கும் உழைப்பு ஆகியவற்றுக்காக யாத்திசையைப் பார்க்கலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்
#யாத்திசை #yaathisai