Tamil Movie Ads News and Videos Portal

கண்ணதாசன் கவிதைகள் பாகம்-4-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

ஒரு கவியரங்கத்தில் கண்ணதாசன் பற்றிப் பேசும்போது,

“கண்ணதாசன் வரிகள் ஒருவரை முதல் இரவுக்கும் அழைக்கும்; முழு துறவுக்கும் அழைக்கும்” என்று துவங்கி, “நீ காய்ச்சிய பாத்திரத்தில் தான் நாங்களும் காய்க்கிறோம்.. நீ பாலைக் காய்ச்சினாய். நாங்கள் தண்ணீருக்கே தடுமாறுகிறோம்” என்று ஏதேதோ பேசினேன். கவி விவரம் அறியாத பருவம் என்பதால் அனைவரும் கைத்தட்டினார்கள். அன்றிலிருந்து கண்ணதாசனின் வனவாசம், மனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம், சிவப்புக்கல் மூக்குத்தி, அவளொரு இந்துப்பெண் என நிறைய வாசித்தேன். அவரின் கவிதைப் பக்கம் அவ்வளவாக ஒதுங்கியதில்லை. இந்தப் புத்தகத்தை நடிகர் ஸ்ரீகாந்த் மேனஜர் குணாண்ணன் இந்த புக்பேர்ல வாங்கிக்கொடுத்தார்.
ஞானம் பற்றிய தேடுதலும் ஞானத்துக்குள் ஊடவேண்டும் என வேட்கையும் கொண்ட வார்த்தைகள் நூலில் கிடைத்தது, “போகந்திரண்ட சன்னியாசி யோனிப்பையை நஞ்சு என்பான்” என்ற வரிகள் அதற்கானச் சான்று

லெளகீகத்தில் முகிழ்த்தெழாத ஒருவன் ஆன்மிகத்தில் படியேறுவது கஷ்டம்.

“வெட்டுப்பட்ட புண்களிலும்
வெம்மி நின்ற கட்டியிலும்
கட்டுப்பட்டு நின்றதொரு காலம்- இன்று
கொட்டுவது ஞானமெனும் மேளம்”

“பட்டகடன் தீர்ப்பதற்கு
கட்டக்கொண்ட பெண்களுக்கு
கொட்டித் தந்த இன்பம் ஒரு கோடி- அதில்
ஒட்டி வந்த ஞானம் ஒரு பாதி”

ஞானத்தின் ஆரம்பம் அதுதான் என்கிறார் தலைவர்

கண்ணதாசன் தாயைப்பாடும் போதுள்ள மனநிலையை நாயைப் பாடும்போதும் கொண்டுள்ளார்

” வாலிலே நன்றி சொல்லும்
வாயிலே பிள்ளையாகும்
காலிலே அன்பு காட்டும்
கண்ணிலே உறவு காட்டும்”

எந்தப் பொருளைப் பாடினாலும் சந்தம் அவருக்கு நெருங்கிய சொந்தமாகிவிடும். இன்றைய நவீன கவிதையில் ஓசை என்பது காலாவதியாகி விட்டாலும் ஓசையுள்ள கவிதைகளை வாசிக்கும் போது உற்சாகம் வரத்தான் செய்கிறது

இளையராஜா இசைஞானி என்றால் கண்ணதாசன் கவிஞானி என்பேன். எப்படி திரைப்பாடல்கள் வழி, “நதியில் விளையாடி கொடியில் தலைவீசி, என கவித்துவமும், “ஆறுமனமே ஆறு” என தத்துவமும் கொட்டினாரோ. அதேபோல் கவிதைகளில் அனுபவத்தையும் ஞானத்தையும் கொட்டியுள்ளார். கண்ணதாசன் கட்டுரைகளிலே ஏகத்துக்கும் கவிதை வடிவம் இடம் பெறும். எந்த வாக்கியம் அமைத்தாலும் அதில் சிறிய ஓசையை காண முடியும்.
கவிதை என்றால் சொல்லவா வேண்டும்?
எந்தச் சாலை என்றாலும் அதில் அழகாக ஒரு புள்ளி வைத்து துவங்கி விடுகிறார். “உலகம் புள்ளிகளால் ஆனதென்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனதென்று எனக்குத் தெரியும்” என்றவர் ஆச்சே