கூளையன், வவுறி, நெடும்பன், செவுடி, மொண்டி, பொட்டி என கோவை சரவுண்டிங் பண்ணயக்காரர்களுக்கு நேந்துவிடப்பட்ட தலித் சிறுவர்களின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்லும் நாவல். இயக்குநர் பா.ரஞ்சித் படமாக்க விரும்பிய நாவலும் கூட!
நில மேயும் ஆடுகளைப் பாதுகாத்துப் பட்டியில் அடைப்பதுடன் முடிவதில்லை கூளையனின் பாடு. பட்டியிலே கிடந்து பண்ணையக்காரி ஊத்தும் கூழையோ கஞ்சையோ குடித்துவிட்டு, அங்கே படுத்துறங்கும் வாழ்வு அவனுடையது. காவல் காக்கையில் ஒரு ஆட்டுக்கு பங்கம் வந்தாலும் மாட்டுக்கு விழும் அடியை விட சாட்டையால் அதிக அடிவிழும். வெறும் கோவணத்தைத் தாண்டிய உடுப்பும், வருடத்துக்கு ரெண்டு மூன்று நாட்களைத் தாண்டிய விடுப்பும் இல்லாத அவர்களின் வாழ்விலும் காடு சில மகிழ்ச்சியை வைத்திருக்கிறது. தலைகீழ் கட்டி தொங்கவிட்ட சம்பவத்திற்குப் பின்னும் கூளையனால் வாழ்வை அடித்தவர்களோடே நகர்த்த முடிகிறது. சூழலால் வரும் இயலாமைக்கும் சூழ்ச்சியால் வர வைக்கப்படும் இயலாமைக்குமான வித்தியாசத்தை ஒவ்வொரு மனிதனும் கண்டைய வேண்டும். “இதைவிட என்னத்தைப் பெருசா நமக்கு வேணும்?” என்ற எண்ணத்தை நமக்குள் விதைக்கும் அதிகாரத்தின் உளவியல் மிகவும் மோசமானது. நாவல் அதை கோடிடவில்லை. வாசிக்கும் போது எனக்குத் தோணித்து
தான் மேய்க்கும் ஆடுகளுக்கு தான் உரிமையாளன் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு ஆடு மேய்ப்பனும் அந்த ஆடுகளுக்கு தகப்பனாகி விடுகிறான். அதனால் தான் வீரனின் கறியை கூளையனால் தொட முடியவில்லை.. வவுறிக்கும் கூளையனுக்கும் இடையில் என்ன இருக்கு? என்றும் என்னவோ இருக்கு? என்றும் எதாவது இருந்தால் நல்லாருக்கும்! என்று எண்ண வைக்கும் அளவில் அவர்களின் உறவை எழுத்தில் வார்த்துள்ளார் பெருமாள் முருகன்
எனக்கு எங்கூரில் ஆடு மேய்த்த நிறைய அண்ணன்களும், எங்க தோடத்தில் ஆடு பத்திவிட்டுக்கிட்டு வேப்பமரநிழலில் இருந்து கதையாடும் சிறுவர்களும், திருக்கார்த்திகைக்கு மறுநாள் அவரவர் வீட்டுக் கொழுக்கட்டைகளை பகிர்ந்துண்ணும் சம்பவங்களும், ஆட்டுத் திருட்டின் பின்னால் இருக்கும் ரணங்களும் அடிகளும் கண்முன்னால் வந்து போனது. இந்த ஒரு வாரமாக கூளமாதாரி நெஞ்சில் கூடு கட்டி வசித்தது❤️