தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’ கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி ரவிசங்கர் யெலமஞ்சலி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி, நிர்வாக தயாரிப்பாளர் தினேஷ், இயக்குநர் சிவ நிர்வானா, நாயகன் விஜய் தேவரகொண்டா, ஒளிப்பதிவாளர் ஜி. முரளி, இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில்,
குஷி படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக இந்தியாவின் பல பகுதியிலிருந்து அழகான ஹைதராபாத்திற்கு வருகை தந்திருக்கும் செய்தியாளர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் வருகை எங்களை கௌரவப்படுத்துகிறது. குஷி அற்புதமான திரைப்படம். இந்தியா முழுவதும் இருக்கும் ரசிகர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையிலான அன்பை முன்னிலைப்படுத்திய திரைப்படம். இப்படத்தின் கதை திருமணம் குறித்தும், உறவு குறித்தும், குடும்பம் எனும் அமைப்பின் மதிப்புக்குறித்தும் சுவாரசியமாக பேசுகிறது. இந்த திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசித்து, ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
இதனிடையே ‘குஷி’ படத்தின் ப்ரீ -ரிலீஸ் நிகழ்ச்சி, இசைக் கொண்டாட்டமாக நடைபெறுகிறது என்பதும், இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ஹைதராபாத்திலுள்ள ஹெச் ஐ ஐ சி மைதானத்தில் நடிகர் விஜய்தேவரகொண்டா, சமந்தா, இசையப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், பிரபல முன்னணி பாடகர்கள், பாடகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இசை விருந்து அளிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.