பாகுபலி திரைப்படத்தின் மூலம் மிகவும் கவனம் ஈர்க்கும் இயக்குநராக மாறி இருப்பவர் இராஜமவுலி என்று சொன்னால் அந்த வாக்கியம் பாதி தான் உண்மை. ஏனென்றால் அதற்கு முன்னரே தான் இயக்கிய ‘மகதீரா’ ‘நான் ஈ’ படங்களின் மூலமே அவர் தன் முத்திரையை அழுத்தமாக பதித்துவிட்டார். அப்படிப்பட்ட ஜகஜால கில்லாடி இயக்குநரின் இயக்கத்தில் யார் தான் நடிக்க விருப்பப்படமாட்டார்கள். எல்லோருமே ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா..? என்று தான் ஏங்குவார்கள். அப்படிப்பட்ட இராஜமவுலியையே ஜுனியர் என்.டி.ஆர். டிவிட்டரில் கால தாமதம் தொடர்பாக கிண்டல் செய்துவிட்டார் என்றும், இல்லை குத்திக் காட்டியிருக்கிறார் என்றும் இருதரப்பு விவாதம் கிளம்பியுள்ளது.
நடந்தது என்னவென்றால் தற்போது இராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ராம்சரண் பிறந்தநாள் கொண்டாடினார். அதற்கு வாழ்த்து செய்தி அனுப்பிய ஜுனியர் என்.டி.ஆர். அதில் , “மன்னிக்க வேண்டும் ராம்சரண் பிரதர். உங்களுக்கு வாங்கிய பரிசை ஜக்கண்ணாவிடம் அனுப்பி கருத்து கேட்டிருந்தேன். இராஜமவுலி என்றாலே எப்படி நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும் தானே.. சிறிய தாமதம்..” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு இராஜமவுலி இன்று வரை எந்த பதிலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.