முழுக்க முழுக்க தாந்த்ரீகம் சம்பந்தப்பட்ட நாவல். ஒரு வாழ்வுக்குள் பல வாழ்வு சிக்குண்டிருப்பதையும், பிறப்பின் கடமை முழுமையடையாமல் போனால் மீண்டும் பிறப்போம் என்பதையும் பேசுகிறது நாவல்
சதீஸ் என்ற மத்திம வயதுடைய ஒருவன், குரு ஒருவரோடு தாசியர் குலத்திலுள்ள பவானி வீட்டிற்கு செல்கிறான். பவானி தாசியர் குல மங்கை. அவளுக்கு இளவயதில் இரு மகள்கள் உண்டு. குரு தன் வீட்டிற்கு வருவதை எதிர்பார்த்த பவானி, குருவிற்கும் சதீஸுக்கும் எல்லாப் பணிவிடைகளையும் செய்கிறாள். குரு அங்கு வரும் இன்னும் சிலருக்கு திருமணம் நடத்தி வைக்கிறார். அதில் ஒரு ஜோடி, பவானியின் மகளும், குருவோட வந்த சதீஸும். அதன்பின் சாமி பூஜை, காம வழிபாடு தொடர்கிறது. வழிபாட்டின் முடிவில் பவானி மீது சில ஆன்மாக்கள் இறங்கி சிலரின் கதைகளைச் சொல்லத் துவங்குகிறது
அந்தக் கதைகள் பேசும், எதார்த்தமும், எதார்த்தமற்றவையும், சத்தியமும், தத்துவமும், ஏமாற்றமும், வலியும், காதலும், காமமும், பற்றும், பற்றின்மையும் தான் இந்த நாவலின் முழு பயணமும்.
முக்தா எனும் பெரு நாட்டிய மேதை ஒருத்தி. அவள் சிறு வயதில் வீடு துறக்கப்பட்டு ஒரு சேட்டு வீட்டில் வளர்கிறாள். 16 வயதை அவள் அடையும் பொழுது, பெரும் செல்வ வளம் கொண்ட சந்திரவர்மா என்ற ஓவியனிடம் அவள் ஒப்படைக்கப் படுகிறாள். முப்பத்திரண்டு வயதான சந்திரவர்மா அவளைத் தங்கம் போல் தாங்கி, அவளின் ஜொலிப்பை உலகெங்கும் காண வைக்கிறான். நாட்டியத்திலும், இறைவனின் கீர்த்தனைகளைப் பாடுவதிலும் அவள் பெரும் புகழ் சேர்க்கிறாள். கூடவே தன்னை இப்படி உயர வைத்த, சந்திரவர்மா மீது காதலும் கொள்கிறாள். தனது 24-ஆவது வயதில் சந்திரவர்மாவை சம்மதிக்க வைத்து மணம் முடிக்கிறாள். இதுவரை ஆண்களின் விரல் கூட படாத தன் மேனியை சந்திரவர்மா தீண்ட வேண்டும் என விரகதாபத்தோடு முதலிரவில் அவனை அணுகுகிறாள். அவன் அதில் தனக்கு நாட்டமும், தகுதியும் இல்லை என்கிறான். இடிந்து போகும் முக்தா, சில ஆண்டுகளை தாபத்தோடே கழிக்கிறாள். திடீரென சந்திரவர்மா இறப்பு நிகழ, முக்தாவிற்குள் இருக்கும் காமத்தீயின் வேகம் கூடுகிறது. உலகில் உள்ள பெரும் பெரும் வி.ஐ.பிக்களை எல்லாம் வீட்டிற்கே வர வைத்து இன்பம் துய்க்கிறாள். ஆனாலும் அவளை முழுமையாக ஆட்கொள்ள யாருமில்லை. ஒரு கட்டத்தில் அவளுக்கே அது சலிப்பைத் தட்டுகிறது. தன் பணிப்பெண்ணும் சகோதரி போன்றவளுமான அகிலாவை அழைத்து, ‘தான் இதில் இருந்து மீள வேண்டும்’ என்கிறாள். அகிலா ஆன்மிக குருவான தன் அண்ணன் கோபாலை வர வைக்கிறாள். தெய்வீக மனம் கொண்ட கோபால், ‘உலகில் நடக்கும் யாவும் கடவுள் சித்தம் என்பதை உணர்த்தி, நடந்ததை விடுங்கள்’ என்கிறான். மேலும் முக்தாவுக்கு நிஜமான காமம் யாராலும் கிட்டவில்லை என்று, தன் வீரியமிக்க காமம் மூலம் உணர்த்துகிறான். இன்னும் பதினாறு ஆண்டுகள் கழித்து மீண்டும் வருகிறேன்’ என்கிறான்
தேவைகள் துளியும் அற்றவனாய், தெய்வத்தை முழுதும் பற்றியவனான கோபால் தந்த குழந்தையை முக்தா வளர்க்கிறாள். ஆண்டுகள் பதினாறு கடக்கிறது. திரும்பி வருகிறான் கோபால். அப்போது அவன் குரு என்ற நிலையை மீறி, ஆண் என்ற நிலைக்குள் வருகிறான். முக்தாவோ, குரு ஸ்நானத்தில் இருந்து தனக்குள் கரு உதிக்கச் செய்த கோபாலைத் தேடுகிறாள். ஆனால் அவன் குரு ஸ்தானத்தைத் துறந்து, ஆணவமும் செல்வச் செருக்கும் கொண்டவனாக நிற்கிறான். இருவருக்குமான வார்த்தைப் போர் மூள்கிறது. முடிவில் கோபால் தோற்றுப் போகிறான். எத்தகைய ஆன்மிகம் கற்றிருந்தாலும், ‘பெண்ணை ஆள வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் அவன் முடிவில் முடிவற்றவனாக தோற்றே ஆக வேண்டும்’ என அந்தக் கதை உணர்த்தியது. மேலும் அக்கதையின் ஆழமும் அடர்த்தியும் அருமை. மிகவும் நுட்பம் வாய்ந்த இன்னும் இருவரின் கதையை பவானி சின்மயியாக மாறிச் சொல்கிறாள்.
இந்த உலகில் பிறந்த யாரும் உருவ அளவில் மறைந்தே ஆகவேண்டும். வாழும் வரை அதை மறந்து வாழ்வதும், நினைத்து வாழ்வதும் அவரவர் வசதிக்கேற்றது. “மீண்டும் பிறப்போம் நம்மை நாமே காண்போம்” என்பதில் நமக்கு உடன்பாடில்லை. இருந்தும் இதுவரை வாசித்த நூல்களில் இந்நூல் மிகவும் வித்தியாசமான வாசிப்பனுபவத்தை வழங்கியது. மலையாள ரைட்டர் ஸ்ரீகுமாரின் அசாத்தியமான கதை கோர்த்தலும், குளச்சல் யூசுப் அவர்களின் மொழி பெயர்ப்பும் Good one