குழந்தைகளின் உலகில் நிறைய கதைகள் உண்டு. அவற்றை நம் படைப்பாளர்கள் கதைகளாக்கியுள்ளார்கள். ஆனால் அவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு எப்படி கற்றுக்கொடுப்பது? குழந்தைகளுக்காக இலக்கியம் படைத்தவர்களின் அற்புதமான கதைகளை தேர்ந்தெடுத்து, அந்தக் கதைகளில் உள்ள அறத்தை, அன்பை, வலியை, வழியை அழகாக அறிமுகப்படுத்தியுள்ளார் எழுத்தாளர் செந்தில் ஜெகன் நாதன்.
கு.அழகிரி சாமி எழுதிய ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற கதையை எத்தனையோ முறை படித்திருக்கிறேன். இப்போது அதை செந்தில் ஜெகன் நாதன் வரிகளில் வாசிக்கும் போது, உணர்வு ரீதியாக மேலும் அழுத்தம் பெற்றேன்.
“பள்ளியில் ஒரு ஏழை வீட்டு சிறுவர்கள் ஒரு பணக்கார பையனிடம் போட்டி போடுகிறார்கள். போட்டியின் சரடு, ‘தீபாவளிக்கு யார் வீட்டில் புதுச்சட்டை எடுக்கிறார்கள் என்பது தான்’ ஏழை வீட்டுச் சிறுவர்களுக்கு அவர்களின் தந்தை தன்னால் முடிந்தளவு புதுத்துணியும் அவருக்கு ஒரேயொரு டவலும் மட்டும் வாங்கி வருகிறார். சிறுவர்கள் புதுத்துணியை ஆசையாக உடுத்து தீபாவளி கொண்டாடுகிறார்கள். இவர்கள் வீட்டுக்கு அழையாத விருந்தாளியாக ஒரு குட்டிப்பையன் வருகிறான். சோற்றுக்கு வழியற்ற சிறுவன் அவன். தெய்வக்குழந்தையான அது தீபாவளிக்கு தானும் புத்தாடை உடுத்தவேணும் என அழுகிறது. அந்த ஏழைத்தாய்க்கு மனம் பொறுக்கவில்லை. கணவனுக்கு எடுக்கப் பட்ட டவலை குட்டிப்பையனுக்கு கட்டிவிடுகிறாள். பொடியனும் அதைச் சந்தோசமாக கட்டிக்கொண்டு அவர்களோடு தீபாவளியை கொண்டாடுகிறான். பக்கத்தில் உள்ள அந்த பணக்கார சிறுவன் வீட்டில் வாணவேடிக்கை முதல் புத்தாடைகள் பலகாரங்கள் என தடபுடலாக நடக்கிறது. பணக்காரப் பையனின் சொந்தக்காரர் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு வந்து தீபாவளியை அதகளப்படுத்துகிறார். அவர் பெயர் ராஜா. மறுநாள் பள்ளியில் ஏழை வீட்டுப்பிள்ளைகளும், பணக்கார வீட்டுப்பையனும் தங்களின் கொண்டாட்டங்களை பகிர்ந்துகொள்கின்றனர். பணக்காரப் பையன் வரிசையாக தன் கொண்டாட்டங்களை அடுக்குகிறான்..இவர்களும் தங்கள் கொண்டாட்டங்களை சொல்கிறார்கள். முடிவில் பணக்காரச் சிறுவன், “எங்கள் வீட்டிக்கு ராஜா வந்திருந்தார்” என்கிறான். இந்த ஏழை வீட்டுப்பிள்ளைகளின் சிறுமி ஒருத்திச் சொல்கிறாள், “எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருந்தார்” என்று. இவர்கள் வீட்டுக்கு வந்த அந்தக் குட்டி குழந்தை பெயர் ராஜா.
அழகிரி சாமியின் இந்த சிறுகதைக்கு நான் வாழ்நாள் ரசிகன். இதை மிகுந்த ரசனையுடன் எழுதியிருப்பார் செந்தில் ஜெகன் நாதன்.
இமையம், ஜெயமோகன், எஸ்.ரா உள்ளிட்ட நிறைய ஆளுமைகளின் சிறந்த சிறுவர் கதைகளை தொகுத்தளித்துள்ளார். 2010-க்குப் பிறகு குழந்தைகளை புத்தக வாசிப்பு பக்கம் இழுப்பது சவால் நிறைந்தது. அதை ஓரளவு சமாளிக்க இப்படியான நூல்கள் உதவும் என்பதற்காக, நடிகர் சிவகுமார் குடும்பத்தின் அகரம் பவுண்டேசன் இந்த நூலை அழகாக வெளியிட்டுள்ளனர்.
நூலில் எனக்குப் பிடித்த இன்னொரு அம்சம், குட்டி இளவரசன் என்ற மிகச்சிறந்த நாவலையும், குழந்தைகளுக்காக எத்தனையோ பாடல்களை, கதைகளை இயற்றிய அழ.வள்ளியப்பா பற்றிய அறிமுகத்தையும் கொடுத்தது. 1950 கால கட்டங்களில், ‘குழந்தைகள் எழுத்தாளர்கள் சங்கம்’ வைக்கும் அளவிற்கு அழ. வள்ளியப்பா சிறார் இலக்கியத்தின் பால் காதல் கொண்டிருந்திருக்கிறார்.
குழந்தைகளை வாசிப்பை நேசிக்கும் படி தூண்டினால் சமூகத்தின் எதிர்காலம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்
இந்த நூலில் ஒரு கதையில் குழந்தை தன் அப்பாவிடம் கேட்கிறது.
‘நட்சத்திரம் எப்படி அப்பா பிறக்கிறது?’
‘நாம் சத்தியத்தை பேசும்போதெல்லாம் நட்சத்திரம் பிறக்கிறது’ என்கிறார் அப்பா