Tamil Movie Ads News and Videos Portal

தென் காமரூபத்தின் கதை-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

அஸ்ஸாம் மன்னர்களால் நிலங்களைப் பரிசாகப் பெற்று வாழ்ந்த கொஸைன்களின் கதை (கொஸைன் என்றால் அதிகார்) இந்நாவல்.

பிராமணர்களை விட உயர்ந்தவர்களாக கருதப்படும் இந்த கொஸைன்களின் மனைவிகள் விதவைகளான பின் படும் பாடுகளையும் நாவல் பேசுகிறது. 19-ஆம் நூற்றாண்டை காலமாக கொண்ட நூல் இது.

உளவியலும், மரபு சார்ந்த பைத்தியக்காரத்தனங்களும், நிலங்களை வைத்துக்கொண்டு இல்லாதவர்களின் உழைப்பைச் சுரண்டுபவர்களின் ஆணவமும், அவர்களைத் தட்டிக்கேட்கும் கம்யூனிஸ்ட்களின் பொதுமையும் நாவலில் ஆங்காங்கே பேசப்பட்டுள்ளது

இந்திரநாத் கதையின் நாயகன். அவனது அப்பா கொஸைன்( அதிகார்) ஆக இருந்தாலும் அதிகார ரூசிக்கு அப்பாற்பட்டவன் இந்திரநாத். அவனது விதவைத் தங்கை கிரிபாலா ஊருக்குள் வரலாற்றுச் சுவடிகளை சேகரிக்க வந்துள்ள ஒரு கிறிஸ்தவனோடு காதல் வயப்படுகிறாள். இந்திரநாத் அதை ஏற்கவே செய்கிறான். ஆனால் சமூக அழுத்தம் தாங்காமல் அவன் ஒரு இடத்தில் உடையவும் செய்கிறான். மனம் எத்தகைய வலிமையாக இருந்தாலும் நமக்குள் ஊற்றப்படும் கலாச்சார வெறி நம்மை அசைக்கவே செய்யும் என்பதற்கு இந்திராத் பிறளும் ஒரு இடம் சாட்சி

விதவையான கிரிபாலா தன் உடலும் உள்ளமும் அடையத்துடிக்கும் உறவை வெளிப்படையாக காட்டுகிறாள். ஊர் அதைக் கண்டு இது பெரும் தீட்டு என்கிறது. பரிகாரமாக அவள் அந்த கிறிஸ்தவனோடு இருந்த கூரை வீட்டை கொளுத்தினால் போதும் என்கின்றனர் சாஸ்திர சழுக்கர்கள். கூரையை கொளுத்தும் போது கிரிபாலா கூரைக்குள்ளே இருந்து விடுகிறாள். அவள் உணர்வுகள் உடலோடு நெருப்புக்கு இரையான போதும் ஊர் திருந்தவில்லை.

இந்திரநாத்தின் சித்தியும் ஒரு விதவை. அவளுக்கு அவள் வீட்டிலே அடைக்கலம் புகுந்த ஒரு பிராமண இளைஞன் மீது ஈர்ப்பு. அதை வெளிப்படுத்த நினைக்கிறாள். மறுகணமே, ‘அய்யோ இது பெரிய பாவம்’ என திகைக்கிறாள். இறந்து போன அவளது கணவன் ஒன்னாம் நம்பர் பொறுக்கி. இருந்தாலும் இறந்த கணவனின் காலணிகளுக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சம்பிரதாயம். அவளும் ஆசைகளைக் கொன்று கொன்று தினம் பூஜைகளைச் செய்கிறாள். இப்படி அன்றைய நாட்களில் அஸ்ஸாமில் விதவைகள் பட்ட அவதிகளை புட்டு புட்டு வைத்துள்ளார் இந்திரா கோஸ்வாமி. அ.மாரியப்பனின் தமிழ் மொழிபெயர்ப்பு அஸ்ஸாமின் 19-ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்வை நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது

கிரிபாலா எடுக்கும் முடிவும், இந்திரநாத்திற்கு அமையும் முடிவும் மனதை உலுக்கும். இந்திரநாத் சித்தி சந்திக்கும் ஏமாற்றமும், அவமானமும் அறிவை அசைக்கும்

பெண்களுக்கு கடந்த காலம் என்பது கசப்பான கடவுள். அந்தக் கடவுளை சகிக்க முடியாமல் இறந்த பெண்களின் ஆன்மாக்கள் நிச்சயம் நிறைய சாபங்களை அள்ளி எறிந்திருக்கும். அச்சாபம் நமை தீண்டாதிருக்க நாம் பாவம் சேர்க்காமல் இருக்க வேண்டும்