சுசீந்திரன் விளையாட்டு சம்பந்தப்பட்ட படமெடுத்தால் அதில் ஆழமும் அழகியலும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கையை அவரது வெண்ணிலா கபடிகுழு, ஜீவா ஆகிய படங்கள் தந்திருந்தன. கென்னடி கிளப் அந்த வரிசையில் தன்னை இணைத்துக் கொள்ளாதது ரசிகர்களின் துரதிர்ஷ்டம்.
திண்டுக்கல் அருகேயுள்ள கிராமத்தில் பொருளாதார நிலையில் பின் தங்கிய வீடுகளில் இருந்து வெளிவரும் வீராங்கனைகளுக்கு விடியல் ஏற்படுத்த வேண்டும் என்ற பாரதிராஜாவின் ஆசைக்கு அச்சாணியாக இருக்கிறார் சசிகுமார். கோச் ஆக அவர் பெரிதாக ரீச் ஆகாவிட்டாலும் ஓரளவு சமாளிக்கிறார். ஐயன் பாரதிராஜா அவர்கள் தான் அவ்வப்போது நடிகர் திலகத்தை நினைவூட்டி சலிப்படையச் செய்கிறார். (எப்படி இயக்கத்தில் ஒரே பாரதிராஜாவோ..அதேபோல் நடிப்பில் ஒரே நடிகர் திலகம் தான்)சுசீந்திரன் ஜீவா படத்தில் கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் அரசியலை சாட்டையடி போல் பேசியவர். இப்படத்தில் வெறும் கனநேர கவர்தலுக்கான காட்சிகளை மட்டுமே பொருத்தி இருப்பது வருத்தம்.
பெண்கள் கபடி விளையாட்டு என்றாலே மார்பு ஞாபகம் வரும் மனநிலையை காட்சிகளில் தவிர்த்திருப்பது ஆகச் சிறந்த இயக்கம். அதற்காக மட்டுமே இயக்குநர் சுசீந்திரனுக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள். நிஜ வீராங்கனைகள் என்பதால் கபடி களம் அவ்வளவு ரியலாக இருக்கிறது. கபடிப் பெண் ஒருவரை சசிகுமாரை காதலிக்க வைத்து டூயட் சாங் போடாமல் விட்டது பேராறுதல். துண்டு துண்டு நல்ல விசயங்களை மொத்தமாக கோர்த்து, சசிகுமார், பாரதிராஜா கெமிஸ்ட்ரிக்கு மேலும் வலு சேர்த்திருந்தால் படத்தின் எமோஷ்னல் ஏரியா நன்றாக கவராகி இருக்கும்.
டெல்லி நம்மை வஞ்சிக்கும், தமிழன் என்றாலே தன் உரிமையைக் கூட போராடித்தான் பெறவேண்டும் என்பதெல்லாம் எதார்த்தம் தான். ஆனால் அதை எதார்த்த திரைமொழியில் சொல்லி இருக்கலாம்.
கபடி பிடிக்கும் என்பவர்களுக்கான விஷுவல் ட்ரீட் படத்தில் இருக்கு..பட் அதுமட்டும் தான் இருக்கு.