பேருந்தில் ஒரு திரில்லர் பயணம்
கோயம்புத்தூர் டூ சென்னைக்கு பயணிக்கிறது ஒரு பேருந்து. அதில் 25 பயணிகள் இருக்கிறார்கள். அந்தப்பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு கொலை நடக்கிறது. சேலத்தில் ஆத்தூர் போலீஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிபிராஜ் இந்தக் கொலைக்கான பின்னணியை விசாரிக்க இறங்குகிறார். அடுத்தடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதித்திரைக்கதை
கதையின் நாயகனாக சிபிராஜ். அசத்தலாக நடித்துள்ளார்..சபரிமலை அய்யப்ப பக்தராக வரும் அவரது தோற்றமும் உடல்மொழியும் அவரது கேரக்டரை அபாரமாக உயர்த்தியுள்ளது. நிச்சயமாக சிபிராஜ் கரியரில் டென் ஹவர்ஸ் பெரிய மைலேஜ் கொடுக்கும். வாழ்த்துகள். சரவணன், கஜராஜ், ராஜ் ஐயப்பா, தங்கத்துரை உள்ளிட்ட பிற நடிகர்களும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர்
திரில்லர் படங்களின் ஆன்மாவாக இருப்பது ஒளிப்பதிவும் பின்னணி இசையும் தான். அதை நன்றாக உணர்ந்து உழைத்துள்ளனர் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்கும், இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியும். இவர்களின் கூட்டுழைப்பு படத்திற்குப் பெரும்பலமாக அமைந்துள்ளது.
கோயம்புத்தூர் டூ சென்னை செல்லும் பஸ் சம்பவத்தில் சேலம் போலீஸை உள்ளிழுத்து திரைக்கதையில் இன்ட்ரெஸ்டிங்-ஐ சேர்த்துள்ளார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள். தொய்வே இல்லாத திரைக்கதை படத்திற்கு அசுரபலத்தைச் சேர்த்துள்ளது. காட்சியமைப்பில் சின்னதாக பழையவாடை தெரிந்தாலும், திரில்லர் விரும்பிகளை 2 ஹவர்ஸ் திருப்திப்படுத்தி அனுப்புகிறது இந்த டென் ஹவர்ஸ்
3.25/5
-வெண்பா தமிழ்