தலைவனை நம்பி வாழ்வை இழந்த ஒரு கட்சித் தொண்டனின் கதை தான் கட்சிக்காரன் கதை. தான் இழந்ததை தலைவனிடம் இழப்பீடாக பெற தொண்டன் போராடும் போராட்டமே படத்தின் திரைக்கதையாக விரிகிறது
படத்தின் நாயகன் சரவணன் பாத்திரம் நம்மிடம் இருந்து அந்நியப்படவில்லை என்பது ஆறுதல். நம் கண் முன்னே ஊருக்கு ஊர் தெருவில் கட்சிக்காகச் சுற்றித் திரியும் அப்பாவித் தொண்டர்களை அந்தக் கேரக்டர் நினைவூட்டுகிறது.
எனவே அந்தக் கதாபாத்திரத்துடன் நாம் எளிதாக நம்மை இணைத்துக் கொள்ள முடிகிறது படத்தில் இதுவொரு பாசிட்டிவான விசயம்
அவரது மனைவி அஞ்சலியாக நடித்திருக்கும் ஸ்வேதா டாரதி அப்பாவி கட்சித் தொண்டனின் மனைவியாக சரியாகப் பொருந்துகிறார். நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைப் போராட்டத்தை, கவலைகளை முகத்தில் காட்டுகிறார்.அந்தக் கிராமத்து முகமும் தோற்றமும் நேர்த்தி
மக்கள் கட்சித் தலைவராக வரும் சிவ சேனாதிபதி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரது உதவியாளராக வரும் அப்புகுட்டியும் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.கதாநாயகனின் நண்பனாக வரும் தெனாலியும் நீள வசனங்கள் பேசி தனது அங்க சேட்டைகள் மூலம் ஆங்காங்கே சிரிப்பையும் வரவழைக்கிறார்.
பின்னணி இசையில் இசைஞர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பட்ஜெட் பிரச்சனை ஒளிப்பதிவில் தெரிவதும் சிறு பிரச்சனையாக இருக்கிறது.
ஆனால் படத்தின் மூலக்கரு காத்திரமாக நம்மை ஈர்க்கிறது. எதிலும் முதலீடு செய்யும் போது அதன் பலனை எதிர்பார்ப்பது நியாயம் தானே? இப்படியான நல்ல கதைக்கு படத்தின் திரைக்கதையை இன்னும் அழுத்தமாக எழுதியிருந்தால் கட்சிக்காரனுக்கு கொடி பிடித்திருக்கலாம்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்