சென்ற வாரத்தில் அயலி என்ற வெப்சீரிஸ் வியந்து பார்க்க வைத்தது. இந்தவாரம் பொம்மை நாயகி கூர்ந்து கவனிக்க வைத்துள்ளாள்.
கடலூர் மாவட்டத்தில் டீக்கடையில் வேலை செய்யும் யோகிபாபு மனைவி மகளுடன் வாழ்ந்து வருகிறார். எல்லா அப்பாக்களுக்கும் போலவே மகள் என்றால் உயிர் யோகிபாபுவிற்கு. அப்படியான மகளுக்கு அதிகார வெறிகொண்டவர்களால் ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. அதை எதிர்கொள்ளும் யோகிபாபுவின் போராட்டங்களே படத்தின் மீதிக்கதை.
யோகிபாபு இந்தக் கதையின் ஆன்மாவிற்குள் முழுமயாக புக முடியாவிட்டாலும் ஓரளவு சமாளித்து கரையேறுகிறார். எல்லா உணர்வுகளுக்கும் ஒரே ரியாக்சன் போன்ற தோற்றத்தை அவர் தவிர்த்திருக்கலாம். யோகிபாவுவின் மகளாக வரும் ஸ்ரீமதி நம் நெஞ்சை அள்ளுகிறாள். பாதிக்கப்பட்ட பின் அவள் காட்டும் முகபாவங்கள் நம்மை பல கேள்விகள் கேட்கிறது. அருள்தாஸ் தன் கேரக்டரின் தன்மை உணர்ந்து அசரடித்துள்ளார். இதர கதாப்பாத்திரங்கள் தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளனர்.
இசையும் ஒளிப்பதிவும் கதையின் போக்கிற்கு சப்போர்ட் செய்துள்ளது. இந்தப்படத்தின் ஒன்மேன் ஆர்மி ஒன் & ஒன்லி இயக்குநர் ஷான் தான். கூர்மையான வசனங்களால் கதைக்கு அவ்வளவு நேர்மை செய்துள்ளார். எந்தக் காட்சியில் எதைக் கன்வே செய்ய வேண்டுமா அதைக் கச்சிதமாகச் செய்யும் திரைமொழி அவருக்கு வாய்த்திருக்கிறது. மிகச்சிறந்த நடிகரான காளி வெங்கட்டை முதலில் இந்தக் கதையின் தலைமை கேரக்டராக வடிவமைத்து பல வருடங்களுக்கு முன்பாகவே பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஷான் அலைந்தார். அவரின் உழைப்பிற்கான பலன் நன்றாகவே கிடைத்துள்ளது.
ஹரி கேரக்டரை வைத்து பேசமுனைந்துள்ள சமூகநீதி, சட்டம் ஆகியவை ரஞ்சித் டச். எளியவர்களின் வலிகளை எளிதாக கடக்கும் அதிகார மட்டத்தை கேள்வியால் உடைக்க வேண்டும் என உரத்துப் பேசும் இந்தப் பொம்மை நாயகி எளியவர்களின் ஒளி விளக்கு.
3.75/5
-மு.ஜெகன் கவிராஜ்