உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்தும் கற்க வேண்டும் என்பது முன்னோர் வாக்கு. ஆசிரியர்களுக்கு உதவி செய்தாவது கல்வி கற்க வேண்டும் என்பதன் பொருள் அது. ஆனால் இன்றையச் சூழலில் ஒரு ஏழை மாணவன் உயர் கல்வியை தொட வேண்டுமானால், தன் உயிர் வரை அடமானம் வைக்க வேண்டியுள்ளது. இப்படியான சூழலுக்கு வித்திட்டது என்ன? கல்வியை விற்றிட முனைந்தவர்கள் யார்? போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கு சிலபல சமரசங்களோடு பதிலளிக்கிறார் வாத்தி
ஒரு கேரக்டருக்குள் புகுந்தால் அக்கேரக்டராக மாறிவிடும் வித்தை அறிந்தவர் தனுஷ். இந்தப்படத்திலும் அதை அவர் செய்திருக்கிறார். பல இடங்களில் அவரால் முழுமையை எட்ட முடியாவிட்டாலும் தன் பலம் கொண்ட மட்டும் நாயக பிம்பத்திற்கு வலு சேர்த்துள்ளார். அவரது ரசிகர்கள் கொண்டாடும் சில காட்சிகள் படத்தில் இருக்கின்றன. தலைக்கு பொருந்தாத விக் ஆக தெரிந்த நாயகி படம் நகர நகர கதைக்குள் பொருந்திப் போகிறார். ஒருதலை காதலைத் தந்தேன் பாடலில் தன் அழகான ரியாக்ஷன்களால் கவர்கிறார். வில்லன் வேடத்தில் சுயநலத்தை அள்ளித் தெளித்து அசத்தியுள்ளார் சமுத்திரக்கனி. கருணாஸ் மகன் கென் ஏற்றுள்ள கேரக்டருக்கு ஆப்டாக இருக்கிறார்
படத்தில் இடம்பெறும் பாடல்கள் ரசிகர்களின் சுவையறிந்துள்ளன. பின்னணி இசையும் வாத்தியை வாரியணைக்கிறது. படத்தின் ஒளிப்பதிவில் தனிப்பதிவாகச் சொல்லவேண்டுமானால் 1999 கால கட்டத்திற்கு ஏற்ற லைட்டிங்கை கொண்டு வந்ததைச் சொல்லலாம். கூடுமான வரையில், பேக்கேஜ் ஆக எல்லாவற்றையும் கூட வைத்துள்ளார் இயக்குநர். தெளிவான கதையில் சிற்சில சமரச விசயங்கள் சேர்க்கப்பட்டிருப்பது கமர்சியல் ஆறுதல் என கொள்ள வேண்டும். ஒரு படம் நம்மை எந்தளவிற்கு entertainment செய்கிறது என்பதை விட எந்தளவிற்கு Educate செய்கிறது என்பது தான் முக்கியம். அந்த வகையில் வாத்தி நமக்கு நல்ல பாடம் எடுத்துள்ளார்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்