உதயநிதி ஸ்டாலின் அமைச்சாரன பிறகு வெளிவந்திருக்கும் முதல்படம். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்குப் பின் மாறன் இயக்கியுள்ள படம். கிட்டத்தட்ட நான்கு வருடம் தயாரிப்பில் இருந்த இப்படத்தின் அவுட்புட் எப்படி இருக்கிறது?
தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களுக்கு யார் காரணம் என்பதையும், அந்த மர்மங்களின் நிஜப்பின்னணி என்ன என்பதையும் கண்டறிந்து சமூகவிரோதிகளை நாயகன் துண்டாடுவதே கண்ணை நம்பாதே படத்தின் கதை
வழக்கம் போல தனது ட்ரேட்மார்க் நடிப்பையே உதயநிதி கொடுத்திருக்கிறார். அது இந்தக்கதைக்கு பொருத்தமாக இருக்கிறது. நெகட்டிவ் ரோலில் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார் பிரசன்னா. ஸ்ரீகாந்த் தன் இருப்பை நன்றாக பதிவு செய்துள்ளார். ஆத்மிகாவின் நடிப்பும், பூமிகாவின் நடிப்பும் சராசரி ரகம். மற்ற கதாப்பாத்திரங்களின் தேர்வும் நடிப்பும் சோர்வளிக்கவில்லை
ஒரு க்ரைம் திரில்லருக்கான பின்னணி இசையை வழங்கி கவனிக்க வைக்கிறார் இசை அமைப்பாளர். லைட்டிங் முதற்கொண்டு சின்னச் சின்ன ஷாட்களிலும் கவனம் ஈர்க்கிறார் கேமராமேன். எடிட்டிங்கின் உதவியும் படத்திற்கு பேருதவியாக அமைந்துள்ளது
சின்னக் கதைக்குள் அபரிமிதமான ட்விஸ்ட்கள் வைத்து திரைக்கதையை அழகாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் மாறன். முதலில் போடப்படும் முடிச்சிகளில் இருந்த இன்ட்ரஸ்டும், லாஜிக்கும், அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் போதும் அமைந்திருந்தால் கண்ணை நம்பாதே நம்மை இன்னும் நம்ப வைத்திருக்கும்.
இந்த வீக் என்ட்ல் ஏமாற்றாத படம் என்ற வகையில் லைக் வாங்குகிறது கண்ணை நம்பாதே
3/5
-மு.ஜெகன் கவிராஜ்