படத்தில் காமெடிக்கென யோகிபாபு,கிங்ஸ்ட்லி, ஜெகன், கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, சத்யன், ஏன் காஜல் அகர்வால் என பெரும் கோஸ்டியே இருக்கிறது. சரி காமெடி இருக்கிறதா? அதெல்லாம் கேட்கக்கூடாது
கே.எஸ்.ரவிக்குமாரை என் கவுண்டர் பண்ண வேண்டும் என்பது காஜலின் அஜண்டா. காஜலின் தந்தையின் நண்பர்களை போட்டுத்தள்ள வேண்டும் என்பது கே.எஸ்ஸின் அஜண்டா, பேயாக மாறினாலும் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது யோகிபாபுவின் அஜண்டா, விஞ்ஞானி சுமனுக்கு அரிய திரவத்தை கண்டுபுடிக்க வேண்டும் என்பது அஜண்டா. இத்தனை கேரக்டர்களின் அஜண்டாக்களையும் தொகுத்து, வகுத்து, கிழித்து நம்மை எல்லாம் பொளந்து கட்டி அடிக்க வேண்டும் என்பதே இயக்குநரின் அஜண்டா! என்னா அடி!
ஒரு கதையை வைத்து மட்டும் திரைக்கதை அமைக்காமல் பல கிளைகளாக கதை பிரிந்து சென்று நம்மை வதை செய்கிறது. காஜல் அகர்வால் கண்களை மூடிக்கொண்டு கதை கேட்டிருப்பார் போல. ஒவ்வொரு காட்சியிலும் ஏனோதானோவென நடித்து ஒப்பேற்றியுள்ளார். யோகிபாபு கிங்ஸ்ட்லி ஜெகன் ஆகியோர் மட்டும் சின்ன ஆறுதல். கே.எஸ் ரவிக்குமார் கேரக்டர் வடிவம் மிகவும் சாதாரணமாக இருப்பதால் அவர் நடிப்பு அதைவிட சாதாரணமாகத் தான் இருக்கிறது
பின்னணி இசை பாடல்கள் என ஒன்றுமே கதைக்கு உதவவில்லை. ஒளிப்பதிவிலும் முழு திருப்தி இல்லை
படு வீக்கான திரைக்கதையால் கோஸ்டி நாஸ்தியாகி இருக்கிறது. படத்தைச் சிக்கனமாக எடுத்து முடிப்பவர் தான் இயக்குநர் கல்யாண். அதற்காக கற்பனையிலும் சிக்கனமாக இருந்தால் எப்படி பாஸ்?
1.55/5
-மு.ஜெகன் கவிராஜ்