அன்பும் அன்பின் நிமித்தமுமாய் வாழ்தலே வாழ்வு என்கிறது எறும்பு.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் வாழும் ஒரு எளிய குடும்பம் சார்லி குடும்பம். சார்லியின் முதல் மனைவி இறந்துவிட ரெண்டாவது மனைவியோடு கஷ்ட ஜீவனம் நடத்துகிறார் சார்லி. முதல் மனைவியின் பிள்ளைகளை ரெண்டாவது மனைவி செய்யும் கொடுமைகள் ஒருபுறம் நடக்க..வீட்டில் ஒரு பொருள் காணாமல் போகிறது. பொருளைத் தொலைத்த சார்லியின் முதல் தாரத்துப் பிள்ளைகள், அதை சித்திக்குத் தெரியாமல் மீண்டும் கொண்டு வரும் போராட்டமும் அதன்பின் நடக்கும் எமோஷ்னலும் தான் படத்தின் கதை
நடிகர் சார்லி தானொரு தேர்ந்த நடிகர் என நிரூபணம் செய்த மற்றொரு படம் இது. இயலாமை பாசம் என மென் உணர்வுகளை தன் முகத்தில் கொண்டு அந்த கேரக்டருக்கு சிறப்பு செய்துள்ளார். பார்க்கவே பயங்கரம் காட்டியுள்ளார் சூசன். வட்டிக்குப் பணம் கொடுக்கும் கேரக்டரில் எம்.எஸ் பாஸ்கர் அசரடித்துள்ளார். ஜார்ஜ் மரியான் வழமை போல் தன் கேரக்டருக்கு அருமை செய்துள்ளார். மோனிகா, ரித்விக் என படத்தில் பங்கேற்ற அனைத்து கேரக்டர்களும் நடிப்பில் சோடை போகவில்லை
எமோஷ்னல் மற்றும் சின்ன திரில்லர் தான் படத்தின் அடிநாதம் என்பதை உணர்ந்து இசை அமைப்பாளர் வேலை செய்துள்ளார். காட்டுமன்னார் கோயில் நிலப்பரப்பை கண்முன் நிறுத்தி அழகழகான ஷாட்களால் நம்மை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் கேமராமேன்
தீவிர உழைப்பின் மூலம் சிறுகச் சிறுக சேர்ப்பதே எறும்பின் பலம். சேர்ப்பதை போலவே கொடுப்பதும் முக்கியம் எனவும், அனைத்தையும் விட அன்பே பிரதானம் என்பதையும் படம் உறுதி செய்கிறது. முன்பாதி படத்தின் நகர்வில் இன்னும் முனைப்பு காட்டியிருக்கலாம் என்பதைத் தவிர இந்த எறும்பை குறையே சொல்லமுடியாது. ஒரு நல்ல திரைக்கதை இயக்கம் மூலம் இயக்குநர் சுரேஷ் g ஜெயித்துள்ளார்
3.5/5
மு.ஜெகன் கவிராஜ்
#Erumbu #எறும்பு