வழியில் வாகனம் பஞ்சராகி தவித்து நிற்பவர்களுக்கு நாம் லிப்ட் கொடுக்கிறோம். நாம் கொடுத்த லிப்டில் நம்மோடு பயணிக்கும் நபர்கள் நடுவழியில் நம்மை கொலை செய்ய முயற்சித்தால் எப்படி இருக்கும்? கேட்கும் போதே திகிலாக இருக்கிறது அல்லவா? இப்படியொரு ஓபனிங் தான் படத்தில். அட செம்ம என நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால் அடுத்தடுத்து படத்தில் என்ன நடந்தது? கண்பார்வை குறைபாடு உள்ள விக்ரம்பிரபு தன் குடும்ப உறவைக் கொன்றவரைக் கண்டிபிடிக்க பெரும் பிரயத்தனம் எடுக்கிறார். அவர் கொலயாளியை கண்டுபுடித்தாரா? என்பதே படத்தின் கதையாக விரிகிறது
சரிகிற தன் கரியரை சரியாக்க வந்த ஒரு படமாக இப்படத்தை நினைத்து உழைத்துள்ளார் விக்ரம் பிரபு. ஆக்ஷன் காட்சிகளில் அவர் போட்டிருக்கும் உழைப்பு சிறப்பு. காதல் காட்சிகள்& எமோஷ்னல் காட்சிகளில் இன்னும் கவனம் எடுக்க வேண்டும் அவர். நாயகி வாணிபோஜன் அழுத்தமில்லாத கேரக்டரில் வந்து போகிறார். அவர் கேரக்டருக்கான ரைட்டிங்கில் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம். வேல.ராமமூர்த்தி தன் வேலையைச் சரியாகச் செய்துள்ளார். ஏனைய கேரக்டர்கள் எல்லாம் ஓகே ரகம்
சாகர் இசையில் கதையின் சரடு விலகவில்லை. என்றாலும் இசையில் இன்னும் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கலாம்.
முதல்பாதியில் அறிமுக இயக்குநரின் படம் என்ற சுவடு தெரியாமல் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் அத்வைத். ஆனால் பின்பாதியில் திரைக்கதையில் நேர்த்தியைத் தவறவிட்டுள்ளார். உயிர்ப்பில்லாத காதல் காட்சிகளும் வழக்கமான கதை நகர்வும் பெரும் சோர்வை ஏற்படுத்தியால் முற்பாதியில் பாய்ந்த ஒளி பிற்பாதியில் மறைந்து விடுகிறது
2.25/5
-மு.ஜெகன் கவிராஜ்
#PaayumOliNeeYenakku #பாயும்ஒளிநீஎனக்கு