குறுஞ்செய்திக்குள் முடிந்து போகும் கதையில் பெருஞ்செய்திகளை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர் ராஜ்மோகன்
சேலம் தனியார் பள்ளி ஒன்றில் ஒரு மாணவரின் தற்கொலை கடிதத்தோடு படம் துவங்குகிறது. மேலும் பெரிய அபிராமி மகளின் விபத்து ஒன்றும் காட்டப்படுகிறது. கட் செய்தால் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குள் நடக்கும் கடைசிபெஞ்ச் போட்டி சண்டை நட்பு என பயணித்து அந்த முதல் கடிதத்தில் வந்து கதை துவங்குகிறது. மொத்தமாக கால் மணி நேரத்தில் சொல்ல வேண்டியதை காலியான காமெடிகளை வைத்து காலி செய்துள்ளனர்
நடிகர்கள் என ஒரு டஜன் பேர் இருக்குறார்கள். பெரும்பாலும் ப்ளாக்ஷீப் பிரபலங்கள் தான். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களாக அவர்களை கற்பனை செய்து பார்க்கவே பகீர் என இருக்கிறது. அம்மு அபிராமி அழகாலும் தன் அழகழகான ரியாக்ஷன்களாலும் ஆறுதல் அளித்தாலும் அவரது கேரக்டரில் அழுத்தமில்லை..ஆர்.ஜே விக்னேஷ் நானும் ரவுடி தான் என +2 மாணவராக வந்து டயர்ட் ஆக்குகிறார். ஒருசில இடங்களில் அவரது காமெடி ஆறுதல். மிகவும் பில்டப் செய்த விருமாண்டி அபிராமி பட புட்டேஜில் பத்து நிமிடம் மட்டுமே வருகிறார். வந்தாலும் எந்த மாற்றத்தையும் அவர் நிகழ்த்தவில்லை
இசை அமைப்பாளர் மட்டும் படத்தில் ஆகப்பெரும் ஆறுதலை அளிக்கிறார். பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே கச்சிதம். ஒளிப்பதிவும் குறைகூற முடியாதளவில் அமைந்துள்ளது.
பலமான கதையுமில்லை. அதனால் திரைக்கதையை பலவீனமின்றி அமைத்திருக்கலாம். நிறைய காட்சிகள் அலுப்பும் சலிப்புமாக கடக்கின்றன. யூட்யூப் வீடியோக்களின் நெடி அதிகம். கடைசியில் சொல்ல வரும் துண்டு மெசேஜுக்காக இரண்டு மணி நேரம் ரசிகனை பலிகடா ஆக்கியிருப்பது எவ்வகையில் நியாயம் இயக்குநரே?
-மு.ஜெகன் கவிராஜ்
# BabaBlackSheep #பாபாப்ளாக்ஷீப்