Tamil Movie Ads News and Videos Portal

தமிழ்க்குடிமகன்- விமர்சனம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை உரக்கச் சொல்லும் மற்றொரு படம்

தென் மாவட்டத்தில் ஓர் கிராமம். முழுக்க ஆதிக்கச்சாதியினர் நிரம்பியிருக்கும் அந்த கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதிக் காரியம் செய்யும் ஒரே குடும்பமாக சேரனின் குடும்பம் இருக்கிறது. மனைவி, மகன், அம்மா, தங்கை என வாழும் சேரனுக்கு தனது குலத்தொழிலைச் செய்ய துளியும் விருப்பமில்லை. அவரது இந்த முடிவை அந்த ஊர் விரும்பவில்லை. இந்த நிலையில் ஊர்த்தலைவர் லாலின் மகனுக்கும், சேரனின் தங்கைக்கும் காதல் வருகிறது. அந்தக் காதலில் சில பிரச்சனைகள் எழுகிறது. மேலும் லாலின் அப்பா இறந்து போகிறார். அவருக்கு இறுதிக் காரியங்கள் செய்ய சேரன் அழைக்கப்படுகிறார். சேரன் இனி நான் அந்தத் தொழிலைச் செய்வதில்லை எனச் சொல்ல, அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை

எப்போதும் அளவுக்கு அதிகமாகவும் அளவுக்கு குறைவாகவும் நடிக்கும் சேரன் இந்தப்படத்தில் அளவோடு நடித்துள்ளார். அவரது கேரக்டரை உள்வாங்கி உணர்ச்சிகளை சரியான படி கடத்தியுள்ளார். நாயகி பிரியங்காவிற்கு பெரிதாக படத்தில் வேலையில்லை. தீப்ஸிகா ஓகே ரகம். ஆதிக்கச் சாதியின் கோரமுகத்தைக் காட்டும் கேரக்டரில் லால் அசத்தியுள்ளார். அருள்தாஸின் நடிப்பும் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. எஸ்.பியாக வரும் சுரேஷ் காமாட்சி படத்தின் முக்கியமான திருப்புமுனை காட்சியில் வருகிறார். ஒரு தேர்ந்த நடிகர் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தை எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி வெகு இயல்பாக நடித்துள்ளார். வக்கீலாக வரும் எஸ்.ஏ சந்திரசேகர், ரவிமரியா உள்ளிட்ட அனைவரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்.

சாம்.சி.எஸ் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலமாக தமிழ்க்குடிமகனை தாங்கிப்பிடித்துள்ளார். ஒளிப்பதிவும் படத்தின் நேர்த்திக்கு உதவியுள்ளது. எடிட்டர் கச்சிதமாக படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் கொண்டு வந்தது சிறப்பு

ஊரில் ஒரு பெரிய வீட்டுச் சாவு. அதற்கு இறுதிக் காரியம் செய்ய வர மறுக்கும் ஊரிலுள்ள ஒரே பட்டியலின குடும்பஸ்தன் என மிகச்சிறப்பான ஒன்லைன் கொண்டது இப்படத்தின் கதை. அதைத் தேர்ந்த திரைக்கதையாக்க சில சமரசங்களை செய்துள்ளார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். மேக்கிங்கிலும் சிலபல தொய்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. வெறும் தகவல்களின் தொகுப்பாக இல்லாமல் சரியான எமோஷ்னல் கனெக்டிங் கொடுத்திருந்தால் இந்தத் தமிழ்க்குடிமகன் நம் நெஞ்சில் குடியிருந்திருப்பான். ஆயினும் வெறும் சாதிப்பிரச்சனையை மட்டும் பேசாமல் அதற்கான தீர்வையும் சொன்னதற்காக இந்தப் படத்தை பாரட்ட மட்டுமல்ல..பார்க்கவும் செய்யணும்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்